சத்யராஜும் அவருடைய மகளும் வேணும்னா ஆதிவாசியாக வாழட்டும்! கலாச்சாரத்தை அழிக்கிறாங்க.. பேரரசு ஆதங்கம்
சென்னை: நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளன. திருமணம், உறவு, குடும்ப வாழ்க்கை குறித்து திவ்யா ஓபனாக பேசிய கருத்து ஒரு பக்கம் ஆதரவை பெற்றாலும், மறுபக்கம் கடும் எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றன.

திவ்யாவின் கருத்து என்ன?
சமீபத்தில் அளித்த பேட்டியில் திவ்யா சத்யராஜ், "திருமணம் எல்லோருக்கும் கட்டாயம் இல்லை. தாலி, மோதிரம் போன்ற பாரம்பரிய சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருவருக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் இல்லாமலே வாழலாம். ஒரே வீட்டில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல் திருமணம் செய்துகொண்ட பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த கருத்து வெளியானதும், சமூக வலைதளங்களில் பலரும் இதை "தனிநபர் சுதந்திரம்" என்று ஆதரித்தனர். அதே நேரத்தில், "இந்த மாதிரி கருத்துகள் சமூக அமைப்பை பாதிக்கும்" என்று சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
சத்யராஜ் ஆதரவு
தன் மகளின் கருத்துக்கு சத்யராஜ் ஆதரவு தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுவே இந்த விவாதத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு சென்றது. "ஒரு முன்னணி நடிகர் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆதரவு தருவது சரியா?" என்ற கேள்வியும் எழுந்தது.
பேரரசு கடும் எதிர்ப்பு
இந்த சூழலில் இயக்குநர் பேரரசு தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வது, கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, யாரும் யாருடனும் வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்லி மக்களுக்கு வழிகாட்டுவது சரியல்ல.

கலாச்சாரம் தேவையில்லை, பண்பாடு தேவையில்லை என்று நீங்கள் மக்களுக்கு சொல்லாதீர்கள். நீங்க பின்னோக்கி போங்க, எப்படி வேண்டுமானாலும் டிரஸ் போட்டுக் கொள்ளுங்கள். நாம் ஆதிவாசிகளை போலவே இருந்துவிட்டு போகலாம், அப்ப வாழ்ந்தவங்களுக்கு பண்பாடு இல்லை, கலாச்சாரம் இல்லை, ஆடைகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தார்கள். அதுபோல நீங்களும் வேணும்னா வாழ்ந்துட்டு போங்க உங்களை யார் வேண்டாம் என்று சொன்னார்கள்? ஆனால் மற்றவர்களை அப்படி வாழ சொல்லி சொல்லாதீர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "ஒருவர் இப்படிச் சொன்னால், அதற்கு பெற்றோர் ஆதரவு தருவது இன்னும் ஆபத்தானது. இது நம்முடைய பாரம்பரிய மதிப்புகளை காலி செய்வது போல இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பரபரப்பு
இந்த விவகாரம் தற்போது இணையத்தில் தீவிரமாக பேசப்படுகிறது. ஒரு தரப்பு: "இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், யாரும் தலையிட வேண்டாம்" என்றும், மற்றொரு தரப்பு "பொதுமக்களுக்கு தவறான சிக்னலாக போகும்" என்று இருவிதமான கருத்துகள் மோதிக் கொண்டிருக்கின்றன.
திவ்யா சத்யராஜ் சொன்ன கருத்துகள் ஒரு சாதாரண பேட்டி கருத்தாக இல்லாமல், "சமூக அமைப்பு vs தனிநபர் சுதந்திரம்" என்ற பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதற்கு எதிராக பேரரசு, மோகன் ஜி போன்றவர்களின் கருத்துகள் மேலும் தீ மூட்டியுள்ளன. இந்நிலையில், இந்த விவாதத்திற்கு சத்யராஜ் அல்லது திவ்யா மீண்டும் பதில் அளிப்பார்களா என்பது குறித்து பலரும் கவனமாக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications