ரன்னிங் ரேஸில் ஓடிய சாவித்திரி.. நொடியில் மொத்த பேரின் வாயடைத்து.. சிதறிய சொத்து.. இப்படியொரு பெண்ணா
சென்னை: சாவித்ரி என்றாலே மகா நடிகை என்று கொண்டாடும் ரசிகர்கள் இன்றும் உண்டு.. ஒருகாலத்தில் ஆந்திரா - தமிழ்நாடு என சாவித்திரியை ரசிகர்கள் உச்சிமுகந்து கொண்டாடியிருக்கிறார்கள்.. திரைப்பட நடிகைகளிலேயே அதிக தயாள குணம் கொண்டவர் சாவித்ரி.. அதேபோல, வேகமாக கார் ஓட்டக்கூடிய நடிகையும்கூட.. ஒருமுறை சாவித்ரி விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார்.
1950களில் நடிகர் சங்கத்தில், நடிகைகளுக்கான ஓட்டப்பந்தயம் வைத்தபோது, சாவித்திரியால் இந்த போட்டியில் ஓட முடியுமா என்று நடிகர், நடிகைகள் சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டார்களாம்.. ஆனால் ஓட்டப்பந்தயத்தில் சாவித்ரி கலந்து கொண்டதுடன், முதல் பரிசையும் தட்டிச்சென்றிருக்கிறார்.

கார் பந்தயம்
அதேபோல, பெண்கள் கார் ஓட்டுவதற்கு மட்டுமல்ல, காரில் பயணிப்பதற்கே யோசித்த காலகட்டத்தில், துணிச்சலாக கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர் சாவித்திரி. அப்போதெல்லாம் நடிகைகள் கார்களை சொந்தமாக வாங்கி, டிரைவர்களை சம்பளத்துக்கு நியமித்து கொள்வார்கள்..
ஆனால் சாவித்ரி மட்டும் தானே கார் ஓட்டிக்கொண்டு ஷூட்டிங் வருவாராம். அந்த அளவுக்கு கார்கள் மீது பிரியம் கொண்டவராம்.. விதவிதமான கார்களை விலைக்கு வாங்கி, அவைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்தும் வந்தாராம்.
கொடை வள்ளல் சாவித்ரி
மிகச்சிறந்த கொடை வள்ளல் சாவித்திரி.. குழந்தையை தூக்கிகொண்டுவந்து, எத்தனையோ பேர் வந்து உதவி பெற்று சென்றுள்ளனர்.. யார் கேட்டாலும் பணம் தந்திருக்கிறார்.. பிரதமர் நிதி, பாகிஸ்தான் நிதிக்காக தன்னுடைய நகை, பணம் எல்லாவற்றையும் அள்ளி தந்துள்ளார்.. அதற்கெல்லாம் கணக்கு பார்க்கவில்லை. திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உண்மையான கொடை வள்ளல் என்றால் அது சாவித்திரிதான்.
எந்த மாதிரியான காலகட்டத்திலும், பிறரின் உதவிகளுக்கு நன்றி மறக்காத குணம் கொண்டவர் சாவித்ரி.. தனக்கு எப்போதோ ஒருவர், காலத்தில் செய்த சிறிய உதவியாக இருந்தாலும், அவர்களே மலைத்து போகும் அளவிற்கு பெரிய பெரிய உதவிகளை செய்து அவர்களை அசத்திவிடுவாராம்.
பரிசுப் பொருட்கள்
திருமணத்துக்கு சென்றால், மணப்பெண் அல்லது மணமகன் தரப்பில் பலரும் பரிசுப்பொருட்களை தருவது வழக்கம். ஆனால், சாவித்ரிக்கு திருமணத்துக்கு அழைப்பு விடுத்தால், மணமகன், மணமகள் இருவருக்குமே சமமாக பரிசு பொருளை தருவாராம்.. அத்துடன் மணமக்களையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து பரிசு தருவாராம்.
ஆர்.சி. புத்தகம்
தன்னுடைய வீட்டில் வேலையாட்களுக்கு பணம் தர முடியாத நிலையிலும்கூட, கார் டிரைவர் விடைபெற வந்தபோது, பர்ஸிலிருந்து கார் சாவியையும் RC புத்தகத்தையும் கொடுத்து, இதை வைத்து பிழைத்துக்கொள் என்று சொன்னாராம்.. அதற்கு பிறகு அந்த கார் டிரைவர், பல டாக்ஸிகளை வாங்கி, பெரிய பணக்காரராகி, சமீபத்தில் தான் இறந்திருக்கிறார். ஆனால், தன் சுயநினைவோடு இருந்து சாவித்திரி செய்த கடைசி உதவி இதுதான்.
கோடி கோடிகளில் சம்பாதித்து அத்தனையும் தருமங்கள் செய்துவிட்டு சாகும்போது கையில் 1 ரூபாய்கூட இல்லாமல் இறந்தாரே என்று சாவித்திரிக்காக வருத்தப்படும் ரசிகர்கள் இன்றும் உண்டு.












Click it and Unblock the Notifications