கடைசி ஆசையை சொல்லி.. வீட்டை எழுதி வைத்த ஹுசைனி.. யார் பெயருக்கு தெரியுமா?
சென்னை: பிரபல நடிகரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் காலமானார். இவர், நடிகர் விஜய் நடித்த 'பத்ரி' திரைப்படத்தில் அவருக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை ஹுசைனி வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் விஜய் அவரை சந்திக்காதது விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், ஷிஹான் ஹுசைனி தனது வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர பிரதேசத்தின் தற்போதைய துணை முதலமைச்சருமான பவன் கல்யாணுக்கு தனது வீட்டை எழுதி வைத்துள்ளாராம் ஹுசைனி.

பவன் கல்யாண், ஹுசைனியிடம் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த வீட்டை தனது நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் ஹுசைனி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாண், ஹுசைனியின் முக்கியமான மாணவர்களில் ஒருவர். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் மற்ற மாணவர்களிடமிருந்து அவர் தனித்து விளங்கினார். 1990களில் செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்க எண்ணிய ஹுசைனி, பவன் கல்யாணின் காரணமாகவே மீண்டும் கராத்தே பயிற்சி அளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். பயிற்சி பெறுவதற்காக நடிகர் பவன் கல்யாண் ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் ஹுசைனியின் வீட்டிற்கு சென்றதாக ஹுசைனி ஒருமுறை கூறியிருந்தார்.
ஷிஹான் ஹுசைனியின் மறைவுக்கு பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹுசைனி காலமானார் என்ற செய்தி எனக்கு மனவேதனையை அளிக்கிறது. நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் எனக்குத் தெரியவந்தது. சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து, அவருக்கு சிறந்த சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நான் தயாராக இருந்தேன். இந்த மாதம் 29-ம் தேதி சென்னை சென்று அவரைப் பார்க்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் ஹுசைனி கடுமையான விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக்கொடுத்ததாகவும், தான் அதிகாலையில் சென்று மாலை வரை பயிற்சி பெற்று 'பிளாக் பெல்ட்' பெற்றதாகவும், அந்த பயிற்சி 'தம்முடு' படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க உதவியதாகவும் பவன் கல்யாண் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ஹுசைனி சுமார் மூவாயிரம் பேருக்கு பிளாக் பெல்ட் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டை பிரபலப்படுத்த அவர் முக்கிய பங்காற்றினார்.
பன்முக திறமைசாலியான ஹுசைனி இசை, ஓவியம் மற்றும் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கினார். பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஊக்கமளிக்கும் பேச்சுகளையும் வழங்கி வந்துள்ளார். இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்று விரும்பிய ஹுசைனி, தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யுமாறு கூறியிருப்பது அவரது உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. ஹுசைனியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications