மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராக தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். ஆனால் சமீபத்தில் அவர் நடித்த படம் எதுவும் பேசப்படவில்லை. மாறாக, அவர் பேசிய ஒரு அரசியல் கருத்துதான் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து பேசிய மகேந்திரன், "உங்க வீட்டுல கரண்ட் இல்லன்னு முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா உடனே கரண்ட் வந்துருமா?" என்றும், "சோலார் பயன்படுத்தலாமே" என்றும் கூறியிருந்தார். மேலும், "வேணும்னா என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கோங்க" என்ற அவரது பேச்சு இணையத்தில் வைரலானது.
ஆனால் அவர் எதிர்பார்த்த ஆதரவை விட, விமர்சனங்கள்தான் அதிகமாக குவிந்தன. சமூக வலைதளங்களில் பலரும் மகேந்திரனின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர். சிலர் அவரை கிண்டல் செய்தனர். சிலர் மீம்ஸ் மூலமாக ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன், மகேந்திரன் விவகாரம் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பழனியப்பன் வீடியோ
அந்த வீடியோவில் பேசிய பழனியப்பன், "மாஸ்டர் மகேந்திரன் தம்பி 100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 'காரா' போன்ற படங்களில் மூன்று வருடங்களாக கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் கூட அவருக்கு கொடுக்காத புகழை, இப்போது மூன்று நிமிட வீடியோ கொடுத்துவிட்டது.
அவர் பேசியது சரி என்று நான் சொல்லவில்லை. அது தவறுதான். ஆனால் அவர் இன்னும் குழந்தைத்தனமாக பேசக்கூடியவர். மனதில் பட்டதை உடனே பேசிவிடுவார். அதே மாதிரி அந்த நிகழ்ச்சியிலும் பேசிவிட்டார். அதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது" என்று கூறியுள்ளார்.
பேச்சில் கவனம் வேண்டும்
அதோடு நிற்காமல், சினிமா மற்றும் சீரியல் நடிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார். "நான் எல்லோரிடமும் ஒன்றைத்தான் சொல்ல விரும்புகிறேன். சினிமா நடிகராக இருந்தாலும், சீரியல் நடிகராக இருந்தாலும், அரசியல் கருத்து பேசுவதற்கு முன்பு நன்றாக யோசிக்க வேண்டும்.
நம்மிடம் பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். யாரிடமும் வாய்ப்பு கேட்காத நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தாராளமாக பேசலாம். ஆனால் இன்னும் வாய்ப்புக்காக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கே ஆபத்தாக மாறலாம்" என்று கூறியுள்ளார்.
அனுபவம்
தனது அனுபவத்தையும் பகிர்ந்த பழனியப்பன், "நானும் இதற்கு முன்பு அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஜெயா டிவியில் பல விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னென்ன விளைவுகள் வரும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
பல கஷ்டங்களையும், பல அடிகளையும் வாங்கித்தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதனால்தான் சின்ன நடிகர்கள் யாராக இருந்தாலும் பார்த்து பேசுங்கள் என்று சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஓட்டு பிரச்சனை
மேலும் பேசிய அவர், "சங்க தேர்தலில் ஒரு ஓட்டு மாற்றிப் போட்டாலே எவ்வளவு பிரச்சனை வருகிறது என்று நமக்கு தெரியும். அப்படியிருக்கும்போது பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவரை ஆதரித்து அல்லது எதிர்த்து பேசும்போது அதன் தாக்கம் இன்னும் பெரியதாக இருக்கும்.
சினிமாவில் இருக்கும் 10 சதவீதம் பேர் மட்டும்தான் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனையை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
பழனியப்பனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பினர், "மகேந்திரனை திட்டுவதற்கு பதிலாக அவருக்கு நல்ல ஆலோசனை கொடுத்திருக்கிறார்" என்று பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் "மகேந்திரன் பேசியது தவறு என்பதை ஒப்புக்கொண்டே, அவர் மீது அளவுக்கு மீறிய தாக்குதல் நடத்த வேண்டாம் என்பதையே பழனியப்பன் சொல்ல வருகிறார்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும், மின்வெட்டு குறித்து மாஸ்டர் மகேந்திரன் பேசிய ஒரு கருத்து, தற்போது தமிழ் சினிமா நடிகர்கள் அரசியல் பேச வேண்டுமா? வேண்டாமா? என்ற புதிய விவாதத்தை சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ளது.














Click it and Unblock the Notifications