சிறகடிக்க ஆசை: நீத்துவை வைத்து விஜயா பிளான், ஸ்ருதி கொடுத்த பதிலடி.. ரோகிணி பற்றி மனோஜ்க்கு தெரியும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் நீத்துவை மனோஜ்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக விஜயா பிளான் போடுகிறார். அதே நேரத்தில் நீத்துவிடம் முகத்துக்கு நேராகவே ஸ்ருதி பதிலடி கொடுத்து அனுப்புகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி தன்னுடைய நண்பர் மகேஷிடம் பேசுவது போன்று நடித்துக் கொண்டிருக்க, அதை பார்த்து மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. பிறகு ரோகிணி வந்து படுத்துக்கொண்டதும் மனோஜ் ரோகிணிக்கு தெரியாமல் அவருடைய போனில் அவர் கடைசியாக பேசிய நம்பரை நோட் பண்ணி விடுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் விஜயா வீட்டில் இருக்கும் போது நீத்து வீட்டிற்கு வருகிறார். தன்னை ரவியின் ரெஸ்டாரண்ட் ஓனர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

ரவிக்கு புது வாய்ப்பு
பிறகு தான் புதியதாக நான்கு ரெஸ்டாரண்ட் தொடங்க போவதாகவும் ரெஸ்டாரண்டுக்கும் ரவி தான் பார்ட்னர் என்று சொன்னதும் விஜயா சந்தோஷப்படுகிறார். அப்போது முத்து இப்படித்தான் முதல்ல சொல்லுவாங்க பிறகு வேலையை வாங்கிட்டு ஏமாத்திடுவாங்க என்று சொல்ல, அதற்கு நீத்து அப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன் என்று தான் கொண்டு வந்த அக்ரீமெண்ட் பத்திரத்தை அண்ணாமலையிடம் கொடுத்து ரவியிடம் கொடுக்க சொல்கிறார்.
ஸ்ருதி கேட்ட கேள்வி
அதற்கு அண்ணாமலை ரவி விஷயத்தில் நான் முடிவெடுக்க முடியாது. எதுவாக இருந்தாலும் ஸ்ருதியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அதற்கு ஸ்ருதி அண்ணாமலைக்கு நன்றி சொல்கிறார். அதோடு நீத்துவிடம் அன்னைக்கு உங்க ரெஸ்டாரன்ட் வளர்ச்சிக்கு நீங்க மட்டும்தான் காரணம்னு சொன்னீங்க இன்னைக்கு ரவியை எதற்காக பார்ட்னர் சேர்த்து இருக்கீங்க என்று கேட்க, அன்னைக்கு பேசினதுக்கு மன்னிச்சுக்கோங்க என்று நீத்து மன்னிப்பு கேட்கிறார்.
நீத்து சொன்ன விஷயம்
அப்போது ஸ்ருதி நான் ரவியிடம் தனியா பேசிட்டு வரேன் என்று ரவியை கூட்டிக்கொண்டு ரூமுக்கு போகிறார். அங்கு ரவியிடம் நான் அன்னைக்கு பேசுனதுனால தான் இன்னைக்கு உனக்காக இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க. நான் செஞ்சது சரிதானே என்று கேட்கிறார். மறுபக்கத்தில் நீத்துவோடு விஜயா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரெஸ்டாரண்ட் தொடங்குவதற்கு எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்க, ஒரு ரெஸ்டாரண்டுக்கு குறைந்தபட்சம் 2 கோடிக்கு மேலே ஆகும். இப்போ நான்கு ரெஸ்டாரண்ட் தொடங்க போறேன் என்றால் எப்படியும் 20 கோடி கிட்ட ஆகும் என்று சொல்ல, 20 கோடியா? உனக்கு யாருமா இவ்ளோ பணம் தருவாங்க என்று விஜயா கேட்க என்னுடைய அப்பா தான் தருவாங்க என்று நீத்து சொன்னதும் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
விஜயா பிளான்
மேலும் நீத்து, ஏற்கனவே எங்களுக்கு பல ரெஸ்டாரண்ட் இருக்கு, இன்னும் நாங்கள் நூறு ஹோட்டல் தொடங்கணும் என்பதுதான் எங்களுடைய டார்கெட் என்று சொல்ல, விஜயா மனதிற்குள் இந்த பார்லர் காரியை கழட்டி விட்டுட்டு மனோஜ்க்கு இந்த பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
கோபப்பட்ட சத்யா
அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் வந்து நீத்து பிளானுக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது நீத்து கிளம்பும்போது அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துட்டு போமா என்று விஜயா சொல்கிறார். மறுபக்கத்தில் மீனாவின் அம்மா சத்யாவிடம் நீ சாப்பிட்டுவிட்டு சீதாவையும் சாப்பிட சொல்லு என்று சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்புகிறார். அதற்கு சத்யா நீங்கள் எல்லாருமே சீதாவின் நிலைமை புரிஞ்சுக்கல என்று கோபப்பட, அதற்கு சீதாவின் அம்மா எல்லாமே மாப்பிள்ளை பாத்துக்குவாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications