ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்! தோட்டத்தில் சூரியகாந்திக்காக காத்திருந்த டைரக்டர் ராம்! ஆர்வம்
சென்னை: பேரன்பு படத்துக்குப் பிறகு 'ஏழு கடல் ஏழு மழை' படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். இப்போது பறந்து போ என்ற படத்தை இயக்கி உள்ளார்.. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் கூடிவரும்நிலையில், சூரியகாந்தி பூவின் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். விரைவில் ஊரெல்லாம் சாமந்தி பூ பூக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேரன்பு படத்துக்குப் பிறகு, ஏழு கடல் ஏழு மழை படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். இதையடுத்து, பறந்து போ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.. இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.. சந்தோஷ் தயாநிதி இசையும், பின்னணி இசையை யுவனும் செய்திருக்கிறார்கள.. வருகிற ஜூலை 4-ம் தேதி இப்படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ராம் சூரியகாந்தி
இந்த படம் குறித்து ராம் சொல்லும்போது, "எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற வாய்ப்பு என் முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. சூரியகாந்தி, கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது.
கற்றது தமிழ்" படத்தின் பாடலை, கடப்பாவில் சூரியகாந்தி தோட்டத்தில் படமாக்கினோம். பிறகு "தங்க மீன்கள்" படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் ஷூட் செய்ய விரும்பினேன்.
தோட்டத்தில் சூரியகாந்தி
ஆனால், அது சூரியகாந்தி பூக்கும் காலம் இல்லை. எனவே, கேரளா அச்சன்கோயிலில், பனி பொழியும் மலை மீது ஷூட்டிங் நடத்தினோம். பேரன்பு படத்துக்காகவும் சூரியகாந்தி தோட்டத்துக்கு நடுவிலேயே வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.. அந்த நேரமும், சூரியகாந்தி சீசன் இல்லை.. எனவே, அந்த வீட்டை, கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம்.
இப்போது மீண்டும் "பறந்து போ" படத்திலும், சூரியகாந்தி கதைக்குள் வந்தது. இப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் இல்லை.. எனவே, மைசூரு பகுதியிலுள்ள ஒரு தோட்டமும், அன்னூரில் ஒற்றை சூரியகாந்தி பூவும்தான் கிடைத்தது.
நிச்சயம் சூரியகாந்தி பூக்கும்
கடைசிவரை சூரியகாந்தியை வைத்து எடுக்க முடியவில்லை.. ஆனால், சூரியகாந்தியை வைத்து படமாக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது. காரணம், அதுதான் சூரியகாந்தி. அப்பாவின் பால்யமும், மகனின் பால்யமும் இணையும் பாடலான சன்பிளவருக்கு மதன் கார்க்கி வரிகள் எழுத, சந்தோஷ் தயாநிதி இசையில் விஜய் யேசுதாஸ் பாடினார்.. . இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நேரத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications