சஞ்சீவின் அக்கா யார் தெரியுமா? அந்த பிரபல நடிகையின் துயர கதை இதுதான்! அக்கா மகளுக்கு அப்பாவான நடிகர்
சென்னை: என் அக்கா இறந்த பின்னர் என்னுடைய அக்கா பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கிருந்தது.. அஸ்வினை நினைத்து எனக்கு சந்தோஷமா இருக்கு" என்று சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஒருமுறை கூறியிருந்தார்.. அப்போதுதான், சஞ்சீவின் அக்கா யார் என்று 2கே கிட்ஸ்கள் சோஷியல் மீடியாவில் தேடினார்கள். பிரபல நடிகை சிந்துதான், சஞ்சீவின் அக்கா என்று ஆச்சரியமானார்கள்..
பொன்மனச்செம்மல் என்ற படத்தில், ஜெய்சங்கரின் மகளாக வில்லியாக நடித்து மொத்த பேரையும் விக்கித்து அன்று போக செய்தார் சிந்து. இதற்கு பிறகுதான் புலன் விசாரணை படத்தில் நர்ஸ் வேடத்தில், தன்னுடைய ஒரிஜினல் பெயர் சிந்துவாகவே நடித்திருந்தார்.

எனினும் அவருக்கு பட்டிதொட்டியெங்கும் பெயர் தந்த படம் இணைந்த கைகள்.. இப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.. தண்ணீர் லாரிக்குள் 'மலையோர குயில் கூவ கேட்டேன் என்ற பாடலை முணுமுணுக்காத இளசுகளே அந்த காலகட்டத்தில் இல்லை. இணைந்த கைகள் படம் படுஹிட்டானதால், பிசியான கதாநாயகியாக வலம் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்..
ஆனால், பாட்டாளி மகன் படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்த சிந்துவுக்கு பெரிய ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..
பிரபலமான நடிகை சிந்து
ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம்வந்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார் சிந்து. ஊர் மரியாதை, கோகுலம், சந்திரலேகா, கோபாலா கோபாலா, பரம்பரை, பிஸ்தா, சூரிய வம்சம், பூவேலி, என்றென்றும் காதல், குங்கும பொட்டு கவுண்டர், அன்பே அன்பே, சொக்க தங்கம். கிரி, ஜனா என்று ஏகப்பட்ட படங்களில் சிந்து நடித்திருந்தார்.

இதற்கு பிறகு சீரியல் பக்கமும் தலைகாட்டினார்.. ஏற்கனவே சினிமாவில் பிரபலம் என்பதால், சின்னத்திரையில் ரசிகர்களின் இதயத்தில் எளிதில் இடம் பிடித்தார்.. குறிப்பாக, பெண், அண்ணாமலை, மெட்டி ஒலி போன்ற டாப் சீரியல்களின் வெற்றியில், சிந்துவுக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது.
ஆஸ்துமா பாதிப்பு
அக்கா, அண்ணி, மருமகள், வில்லி என போன்ற விதவிதமான கேரக்டர்களில் நடித்து 90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிந்து... உச்சத்தில் இருந்தபோதே பிரபல கன்னட நடிகர் ரகுவீர் என்பவரை 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அடுத்த 10வது வருடம் அதாவது கடந்த 2005ல் உடல்நலக்குறைவால் சிந்து இறந்துவிட்டார்.. சுனாமிக்கு நிதி திரட்டுவதற்காக சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஊர்வலமாக சென்றனர்.. அப்போது சிந்துவும் அதில் கலந்து கொண்டார். நீண்ட தூரம் நடந்து சென்றதாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கேட்டு வீடு வீடாக அலைந்து வந்த நிலையிலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

மஞ்சுளாவின் சகோதரி மகள்
அப்போதுதான் அவருக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிந்து இறந்துவிட்டார். அப்போது சிந்துவுக்கு 33 வயதுதான் ஆகியிருந்தது. சரத்குமாரின் ஐயா படம்தான் சிந்துவின் கடைசி படமாகும்.. அதுமட்டுமல்ல, நடிகர் விஜயகுமாரின் மனைவியான நடிகை மஞ்சுளாவின் சகோதரி மகள் தான் சிந்து என்பது கூடுதல் தகவலாகும்.
சிந்து இறந்தபோது அவரது மகள் ஸ்ரேயாவுக்கு 9 வயதாகும்.. தாயை பிரிந்து கலங்கி நின்றபோது, ஸ்ரேயாவை அப்பா ஸ்தானத்தில் எடுத்து வளர்த்தது சிந்துவின் தம்பி சஞ்சீவ்தான்..
சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரேயாவுக்கு, அஸ்வின் ராம் என்ற டைரக்டரை திருமணம் செய்து வைத்து, அப்பா, தாய்மாமன் என்ற பொறுப்பை சிறப்பாக செய்து முடித்திருந்தார் சஞ்சீவ்.

நெருங்கிய நண்பர் - சந்தோஷம்
அன்பறிவு மற்றும் டார்லிங் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்தவர்தான் அஸ்வின் ராம். இந்த திருமணத்தில் சஞ்சீவின் நெருங்கிய நண்பர் நடிகர் விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார்.
என் அக்கா இறந்த பின்னர் என்னுடைய அக்கா பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்பு இருந்தது. அஸ்வினை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சஞ்சீவ் கூறியிருந்தது பலரது கவனத்தையும் அப்போது பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications