உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான லட்சுமியின் மகளும், திறமையான நடிகையுமான ஐஸ்வர்யா பாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி, பெண்கள் உடல்நலத்தில் முக்கியமான ஒரு கட்டமான 'மெனோபாஸ்' குறித்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நேரத்தில் அவர் பட்ட வலி வேதனைகளை எமோஷனலாக அவர் பகிர்ந்திருக்கிறார்.

உயிரே போய்விடும் போல வலி
அந்த பேட்டியில் ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பகிர்ந்தார். பெங்களூரில் ஒரு ஷூட்டிங் காரணமாக தங்கியிருந்த போது திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையும், அதனுடன் கூடிய அதிக ரத்தப்போக்கு அவரை அதிர்ச்சியடைய வைத்ததையும் கூறினார்.
"படுக்கை முழுக்க நனைந்து போய்விட்டது... அந்த அளவுக்கு ப்ளீடிங். வலி உயிரே போய்விடும் போல இருந்தது. நான் துடித்துக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் அம்மாவுக்கு போன் பண்ணி, 'என்னால இதை தாங்க முடியல... என் உடம்புக்குள் கைய விட்டு என் நியூட்ரஸை பிடிங்கி எடுத்து போடணும் போல இருக்கு'ன்னு அழுதேன்" என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு அவருடைய அம்மா லட்சுமி, "இப்படி வலி அதிகமாக வந்திருக்கிறது என்றால் இது முடிவாகும்... இதோடு நின்றுவிடும்" என்று ஆறுதல் கூறினாராம். கடும் வேதனைகளை கடந்த பிறகு, அந்த காலகட்டத்துடன் அவரது மாதவிடாய் நிறுத்தமடைந்ததாகவும் தெரிவித்தார்.
சினிமா பின்னணி
லட்சுமி, 1970-80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பல விருதுகளை வென்றதுடன், கதாபாத்திர நடிப்பில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது மகள் ஐஸ்வர்யா, 1990களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நியாயங்கள் ஜெயிக்கும், ராசுக்குட்டி போன்ற படங்களில் நடித்த அவர், பின்னர் கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்தினார்.
சினிமாவைத் தாண்டி, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக குடும்பம் சார்ந்த கதைகளில் அம்மா, அக்கா போன்ற வலுவான கேரக்டரில் நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குடும்பம் மற்றும் வாழ்க்கை போராட்டங்கள்
ஐஸ்வர்யாவின் வாழ்க்கை சினிமா மட்டுமல்லாமல், பல ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்துள்ளது. திருமணம், விவாகரத்து, பொருளாதார சிக்கல்கள் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்ட அவர், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார்.
தனது அம்மா லட்சுமி பற்றிய அவர் பேசும்போது, வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தாயின் ஆதரவு தான் தன்னை முன்னேற்றியதாக பலமுறை கூறியுள்ளார்.
பெண்களின் உடல்நல பிரச்சனைகள்
ஐஸ்வர்யா பகிர்ந்த அனுபவம், பல பெண்கள் மெனோபாஸ் காலத்தில் சந்திக்கும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. அந்த காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வலி, மன அழுத்தம், கோபம், உடல் சோர்வு போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.
எப்படி சமாளிக்கலாம்?
பெண்கள் இந்த கட்டத்தை பாதுகாப்பாக கடக்க சில முக்கிய ஆலோசனைகள், மருத்துவரை தவறாமல் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பயிற்சி, யோகா போன்றவற்றை ஃபாலோ பண்ண வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். குடும்பத்தினருடன் ஓபனாக பேச வேண்டும்.
வெளிப்படையாக பேசும் தைரியம்
ஐஸ்வர்யா பாஸ்கர் போன்றவர்கள் இப்படியான விஷயங்களை வெளிப்படையாக பகிர்வது, சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குகிறது. பெண்களின் உடல்நலத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவும் இது உதவுகிறது.












Click it and Unblock the Notifications