இளையராஜாவுக்கு எனக்கு பாட வாய்ப்பு கொடுக்க விருப்பமில்லை.. காரணம்? வெளிப்படையாக பேசிய பாடகி T.K கலா
சென்னை: நடிகையாகவும், பாடகியாகவும் பலருக்கும் பரிச்சயமான டி.கே.கலா பேட்டி ஒன்றில் தனக்கு இளையராஜா பாடுவதற்கு வாய்ப்பு தராதது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். தான் பாடிய பாடல்களில் ஆரம்பத்தில் இளையராஜா இசை அமைத்தார், ஆனால் அவருடைய பாடல்களில் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கும் நிலையில் அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக டி.கே. கலா நடித்திருப்பார். அவரைப் பார்த்ததும் அம்மாடி இப்படி ஒரு அம்மாவா? இது போல யாருக்கும் ஒரு மாமியார் கிடைக்கவே கூடாது என்று பல பெண்கள் பயந்து போகும் அளவில்தான் அவருடைய கேரக்டர் இருந்தது. ஆனால் அவர் ஒரு பிரபலமான பாடகி என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும்

பல வருடங்களுக்கு முன்பு வெளியான "அகத்தியர்" திரைப்படத்தில் இடம் பெற்ற "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்ற பாடலை பாடியது இவர்தான். அதுபோல முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் பாடல்களில் இவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அதுபோல ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற "வந்தனம் வந்தனம்" பாடல், பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற "போய் வா நதியலையே" என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.
அதுபோல ஏ ஆர் ரகுமான் இசையில் டூயட் படத்தில் இடம்பெற்ற "குளிச்சா குற்றாலம்" பாடல், கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "ஆராரோ ஆரிராரோ" அதுபோல மறுமலர்ச்சி, தாஜ்மஹால், சிவப்பதிகாரம் என்று பல படங்களில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல பாடல்கள் பாடி இருக்கிறார். அதோடு நடிகையாகவும் கில்லி படத்தில் மட்டுமல்லாமல் கஸ்தூரிமான், வெயில், குருவி, நீ உன்னை அறிந்தால், பிரிவோம் சந்திப்போம், காடு, ஐ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னதிரையில் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் பல பாடல்கள் பாடி இருந்தாலும் தனக்கு இளையராஜா ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
அதில் அவர் பேசுகையில், இளையராஜா நான் பாடிய நந்தா என் நிலா என்ற படத்தில் கீ போர்டு வாசித்து இருந்தாரு. அதுபோல ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற ஒரு படத்திலேயும் இளையராஜா தான் கீபோர்டு வாசிச்சிருந்தாரு. நான் அந்த நேரத்தில் தக்ஷனா மூர்த்தி என்ற ஒரு பெரிய மியூசிக் டைரக்டர் இசையமைத்த அந்த ரெண்டு படங்களிலும் பாடி இருந்தேன். அந்த ரெண்டு படங்களிலும் இளையராஜா கீபோர்டு வாசித்து இருந்தாரு.
அதற்குப் பிறகு இளையராஜா இசையமைத்த படங்களில் எனக்கு வாய்ப்பு தரவே இல்லை. என்னன்னு தெரியல அவர் எனக்கு ஆரம்பத்தில் கீபோர்டு வாசித்து இருக்கிறார். ஆனால் அவருடைய பாடல்களில் எனக்கு வாய்ப்பு தரவில்லை. நான் செங்காத்து மண்ணிலே என்ற ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்திற்கு இளையராஜா தான் புரொடியூஸ் பண்ணினார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவருடைய இசை அமைப்பில் டி.கே கலான்னு என்னை கூப்பிட்டு ஒரு வாய்ப்பு தரல.
பல மியூசிக் டைரக்டர்களிடம் நான் பாடியிருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மியூசிக் டைரக்டர்களிடமும் நான் பாடி இருக்கிறேன். ரவிக்குமார், சங்கர் கணேஷ் மட்டுமல்லாமல் பழம்பெரும் மியூசிக் டைரக்டர்கள் இசையில் நான் பாடி இருக்கிறேன். ஆனால் இளையராஜா சார் எனக்கு வாசித்து இருக்கிறாரே தவிர அவருடைய இசையில் எனக்கு வாய்ப்பு கொடுக்கல. அவருக்கு எனக்கு வாய்ப்பு கொடுக்க இஷ்டமில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஏன்னா அவர் நினைச்சிருந்தார்னா எனக்கு பாட்டு கொடுக்க கூடாதுன்னு சொல்ல முடியாது. ஏன்னா அவரை தடுக்க வேற யாரும் கிடையாது. எத்தனையோ மொழி நடிகைகளுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். நான் பல வருடங்களாக சினிமாவில் பாட்டு பாடினாலும் இளையராஜா எனக்கு இதுவரைக்கும் வாய்ப்பு தரவில்லை என்று அந்த பேட்டியில் டி.கே கலா பேசியிருக்கும் நிலையில் இதற்கு அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications