எல்லாமே கடனுங்க.. ஓடிடிக்கு நோ! யூடியூப்பை நம்பும் வனிதா.. கண்ணீரோடு வைத்த வேண்டுகோள்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, இயக்கி நடித்த 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டாத நிலையில், வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பேசுபொருளாகின்றன. கடந்த சில வாரங்களாக அவருடைய திரைப்படம் பற்றிய பேச்சு இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. வனிதா விஜயகுமார் 30 வருடங்களுக்குப் பிறகு கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படத்தின் கதை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

வனிதா பற்றிய சர்ச்சை
அதேபோல, அந்த திரைப்படத்தில் இளையராஜா இசை அமைத்த 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை வனிதா பயன்படுத்தியதற்கு இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே இளையராஜாவிடம் நேரில் சந்தித்து இது குறித்து அனுமதி வாங்கிவிட்டதாக வனிதா சொல்லியிருந்தார். மேலும், பாடலின் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனத்திடம் இருந்தும் முறையாக அனுமதி வாங்கியிருப்பதாக கூறியிருந்தார். ஆனால், இளையராஜா வழக்கு தொடர்ந்தது வனிதாவை அதிர்ச்சி அடைய வைத்தது. அதனால், பேட்டிகளில் கண்ணீரோடு பேசிக் கொண்டிருந்தார்.
லைவில் வனிதா
திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்காததால், வனிதா இப்போது முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் நேரலையில் வந்த வனிதா கண்ணீரோடு பேசியிருந்தார். "நான் இந்த படத்திற்கு அதிகமாக கடன் வாங்கி தான் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். எனக்கு பெரியதாக வருமானமும் கிடையாது, யாரும் துணையும் கிடையாது. என்னுடைய மகளும் இப்போதுதான் சினிமா பீல்டுக்கு வருகிறார்."
"எல்லாமே கடன் தான். என் மகளிடம் இருந்த கொஞ்சம் பணமும், கொஞ்சம் கடனும் வாங்கி தான் இந்த படத்தை நாங்கள் எடுத்து முடித்தோம். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் வசூல் வரவில்லை. ஓடிடிக்கு கொடுத்தாலும் அது எங்களுடைய கடனை அடைக்க போதாது. காரணம் பெரிய படங்கள் என்றால் ஓடிடியில் நீங்கள் ஒரு முறை பார்த்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். ஆனால், சின்ன படங்கள் நீங்கள் ஓடிடியில் பார்க்கும்போது வெறும் இரண்டு ரூபாய் தான் கிடைக்கும். இதனால் எங்களுக்கு அதிகமான கஷ்டம் தான் கிடைக்கிறது. அதற்காகத்தான் நான் இப்போது மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய வனிதா, "அதாவது என்னுடைய யூடியூப் சேனலில் வரும் வெள்ளிக்கிழமை இந்த படத்தை வெளியிடப் போகிறேன். அதற்கு என்னுடைய யூடியூப் சேனலில் மெம்பராக வேண்டும். அதில் மெம்பர் ஆகிறவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். மெம்பர் ஆவதற்கு நீங்கள் தியேட்டரில் எவ்வளவு டிக்கெட் கொடுக்கிறீர்களோ அதைவிட குறைவான தொகை தான் கட்ட வேண்டியது இருக்கும். அதை நீங்கள் ஒருமுறை கட்டி விட்டால் இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ மட்டுமல்லாமல் பல விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்" என்றார்.
கண்ணீரோடு வேண்டுகோள்
"எனக்காக தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். இந்த முறை இந்த விஷயத்தில் சப்போர்ட் பண்ணுவீங்க என்று நினைக்கிறேன். இப்போது திரை அரங்குகளில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இதில் மெம்பராக இணைந்தால் இந்த படத்தை பார்க்கலாம். தயவு செய்து எனக்கு இந்த சப்போர்ட் பண்ணுங்க" என்று கண்ணீரோடு வனிதா நேரலையில் பேசியிருக்கிறார்.
திரையரங்குகளில் வெளியான 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், வனிதா யூடியூப் சேனல் மூலம் படத்தை வெளியிட எடுத்திருக்கும் முடிவு ஒரு மாற்று முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications