தண்டட்டி காது.. விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த மூதாட்டி பெருமாயி காலமானார்!
மதுரை: பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மூதாட்டி பெருமாயி காலமானார். பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானவர் பெருமாயி. விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார் பெருமாயி. இந்நிலையில் அவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தெக்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானவர். தண்டட்டி அணிந்த காதுடன் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கிராமத்து கதைக் களங்களில் பாட்டி வேடத்துக்கு பொருத்தமாக வாழ்ந்தவர் பெருமாயி.

விஜய் நடித்த வில்லு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பெருமாயி. பல முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட கிராமப்புற களம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருமாயி பாட்டிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications