விஜய்க்கு பொண்டாட்டியாக இருப்போம்! கூச்சலிட்ட பெண், ஒரே வார்த்தையில் ப்ளூசட்டை மாறன் ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய்யின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி எழுந்துள்ள விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது மனைவி சங்கீதா விஜய் சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சில குறிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும், அதை நிறுத்த பலமுறை கூறியும் அது தொடர்ந்ததாகவும், தேவையானால் அந்த நடிகையையும் வழக்கில் சேர்க்க வேண்டிய நிலை வரும் என்ற வகையிலும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை உறுதி செய்யப்படாதவையாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு விவாதத்தை கிளப்பி வருகின்றன.

மேலும், இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சி வசப்பட்ட எதிர்வினைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, விஜய் சமீப காலமாக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியிருப்பதையும், அவரது கட்சி செயல்பாடுகள் வேகமெடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, இது அரசியல் சதி என்கிற கோணத்தில் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான நடவடிக்கைகளும் இந்த விவாதத்தில் இழுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தொலைக்காட்சி பேட்டியில் விஜயின் தீவிர ரசிகை ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு "தளபதிக்கு நாங்கள் அக்காவாகவும், தங்கையாகவும் இருக்கிறோம்... தேவைப்பட்டால் மனைவியாகவும் இருப்போம்" என்று பேசிய வீடியோவும் வைரலானது. ரசிகர் மனநிலையை காட்டும் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடமும் எதிர்வினைகளை உருவாக்கியது.
அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் கூறிய கருத்தும் இணையத்தில் வேகமாக பரவியது. அதில் "தவெக கூட்டத்தில் பெற்ற பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை என்று கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சி தான் இது... இன்னும் பல கேவலங்களை நாம் பார்க்கப் போகிறோம்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் இந்த விவகாரம் சினிமா - ரசிகர்கள் - அரசியல் என்ற மூன்று கோணங்களிலும் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.
விஜய் - சங்கீதா தம்பதியினர் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் ஆரம்ப காலங்களில் சங்கீதா பெரும்பாலும் வெளிநாட்டிலேயே இருந்ததும், குடும்பத்தை கவனித்ததும், பட விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் விஜயுடன் கலந்து கொண்டதும் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக பொதுவெளியில் அதிகம் தோன்றாதது குறித்து ஏற்கனவே சில சமயங்களில் பேசப்பட்டிருந்தது.
இந்த விவாகரத்து மனு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், குடும்ப விவகாரம் என்பதால் இதை தனிப்பட்ட விஷயமாகவே பார்க்க வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications