அப்பா கடைசியா கேட்டது இதுதான்! இப்ப வரைக்கும் அந்த வருத்தம் இருக்கு.. நடிகர் வினு சக்கரவர்த்தி மகள் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களால் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகர் வினு சக்கரவர்த்தி குறித்து அவரது மகள் அளித்த உருக்கமான பேட்டி தற்போது ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. திரையில் கொடுமையான வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் காமெடியான கேரக்டரிலும் தத்ரூபமாக நடித்த அவர், நிஜ வாழ்க்கையில் எவ்வளவு பாசமிக்க மனிதர் என்பதை இந்த பேட்டி மீண்டும் நினைவூட்டுகிறது.

நடிகர் வினுசக்கரவர்த்தி மகள் பேட்டி
அந்த பேட்டியில் வினு சக்கரவர்த்தியின் மகள் கண்கலங்கியபடி, "அப்பா கடைசியாக என்னிடம் 'முறுகலா ஒரு தோசை சுட்டுக்கொடு' என்று கேட்டார். ஆனால் அப்போது அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. டாக்டர்கள் கண்டிப்பாக எண்ணெய், காரம் உள்ள எந்த உணவையும் கொடுக்கக் கூடாது, குறிப்பாக தோசை போன்றவை கொடுக்கவே கூடாது என்று சொல்லி இருந்தார்கள். அதனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசவே இல்லை... சில மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்," என்று கூறியுள்ளார்.
மறையாத வருத்தம்
அந்த நினைவு இன்றும் அவரை துன்புறுத்திக் கொண்டே இருக்கிறதாம். "இப்போதும் நான் தோசையை பார்த்தாலே மனசுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி வருகிறது. அந்த நாளில் கடைசியாக ஒரு தோசை சுட்டுக் கொடுத்திருக்கலாமோ என்று அடிக்கடி நினைக்கிறது..." என்ற அவரது வார்த்தைகள், அந்த தருணத்தின் வலியை வெளிப்படுத்துகின்றன.
பல திறமை
திரையுலகில் வில்லன் என்ற பெயரை பெற்றிருந்தாலும், வீட்டில் அவர் முற்றிலும் வேறுபட்ட மனிதராம். மிகவும் ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப பாசம் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டவர் என்று அவரது மகள் கூறியுள்ளார். குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை நெறி ஆகியவற்றில் அவர் கடுமையாக இருந்தாலும், அதற்குள் அன்பும் இருந்தது. "வெளியில் எல்லாருக்கும் அவர் ஒரு கேரக்டர்... ஆனால் எங்களுக்கு அவர் அப்பா," என்று வினு சக்கரவர்த்தி மகள் தந்தை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

வினு சக்கரவர்த்தி குடும்பம்
குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். திரையுலகில் இருந்தாலும், குடும்பத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல், ஒரு சாதாரண வாழ்க்கையில் வளர்க்க முயன்றார். எளிமையான வாழ்க்கை தான் அவரது குடும்பத்தில் நிலைத்திருந்த மதிப்புகள்.
சினிமா பயணத்தைப் பார்த்தால், வினு சக்கரவர்த்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனித்துவம் காட்டியவர். பல தலைமுறைகளுக்கு நினைவில் நிற்கும் வகையில் அவர் உருவாக்கிய கேரக்டர்கள் இன்று கூட ரசிகர்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் சுந்தரா ட்ராவல்ஸ், குரு சிஷ்யன் போன்ற படங்கள் எல்லாம் இப்போதைய இளைஞர்களுக்கும் தெரிந்த கேரக்டர் தான்.
மேலும், புதிய திறமைகளை ஊக்குவிக்கும் குணமும் அவருக்கு இருந்தது. பலருக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்ற பெயரும் அவருக்குண்டு. அதனால் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல-பலரின் வாழ்க்கையில் தடம் பதித்த மனிதர்.
2017ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும், வினு சக்கரவர்த்தி விட்டுச் சென்ற நினைவுகள் இன்று கூட அவரது குடும்பத்தினரின் மனதில் ஆழமாக வாழ்கின்றன.













Click it and Unblock the Notifications