எம்ஜிஆரின் தீவிர ரசிகர்..உதவிக்கு அஞ்சாத குணம்..மயில்சாமியின் குணம் பற்றி அன்றே நெகிழ்ந்த விவேக்
நடிகர் மயில்சாமியின் உதவும் குணம் பற்றி மறைந்த நடிகர் விவேக் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்படுகிறது.
சென்னை: நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல் நல குறைவால் உயிர் இழந்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த கௌம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
நடிகர் மயில்சாமியின் ரசிகர்கள் பிரபலங்கள் தொடர்ந்து அவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் தான் ரோல் மாடல்
நடிகர் மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் அவரோடு பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் விவேக் மயில்சாமியின் உதவும் கேரக்டரை பற்றி பேசிய பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் விவேக் எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரை ரோல் மாடலாக கொண்ட மயில்சாமி அவரைப் போலவே பலருக்கும் ஓடி சென்று உதவும் குணம் கொண்டவர் என்று, மயில்சாமி போலவே அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். பல குரலில் பேசி அசத்தும் மயில்சாமியை போன்று நடிகர் விவேக் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

தங்க சங்கிலி பரிசளிப்பு
இவரை மயில்சாமியை பார்க்கும்போது இவர் இளிச்சவாயனா? அல்லது நல்லவரா? என்று ஒரு சந்தேகம் வரும். அப்படிப்பட்ட ஒருத்தர், தான் கஷ்டப்பட்ட காசை எல்லாம் ஒரு செயின் வாங்கி அதில் ஒரு எம்ஜிஆரின் பதக்கம் வச்சு பெரிய செயின் அதுவும் தொப்புளுக்கு கீழே வரைக்கும் தொங்கும் அந்த அளவுக்கு பெரிய செயின் அதை போட்டு இருப்பார். ஒருமுறை கடலூர் பக்கம் சுனாமி பாதிப்பின் போது ஹாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மக்களுக்கு உதவிகளை செய்து இருக்கிறார். அதை பார்த்து நெகிழ்ந்து போன மயில்சாமி தன் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரைந்து சென்று அங்கிருந்த விவேக் ஓபராயை சந்தித்து அவருடைய கழுத்தில் தான் ஆசையாக அணிந்திருந்த எம்ஜிஆர் டாலர் பதித்த தங்க சங்கிலியை அவருடைய கழுத்தில் மாட்டிவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்து விட்டார்.

உதவும் குணம்
யாருக்கு உதவி செய்யணும் என்று தோன்றுகிறதோ அதை உடனே செய்து விடுவது தான் அவருடைய பழக்கம். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்று இருப்பதை அனைவருக்கும் கொடுத்துவிடுவது மயில்சாமியின் கேரக்டர் என்று கூறியிருக்கிறார். இன்று பத்தாயிரம் ரூபாய் அவருக்கு சம்பளம் கிடைக்கிறது என்றால், அதை அவருக்கு இவருக்கு என எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு அடுத்த நாள் செலவுக்கு ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருப்பது மயில்சாமியின் வாழ்க்கையில் பலமுறை நடந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பாரதியார் போன்ற குணம்
அதுபோல ஒரு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் போது நாங்கள் எல்லோரும ஒரு இடத்தில் இருந்தோம். அப்போது அங்கே நிகழ்ச்சி ஒன்றில் ஹிந்தி பாடலுக்கு வாசித்த இசை கலைஞர்க்கு தனது கையில் இருந்த மொத்த பணத்தையும் அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, பிறகு தனக்கு வீட்டுக்கு செல்வதற்கு ஆட்டோக்கு கூட பணம் இல்லாமல் என்னிடம் வாங்கி சென்றார். இதோடு விட மாட்டார் மயில்சாமியும், பாரதியாரும் ஒன்றுதான் என்று சொல்ல வேண்டும். பாரதியார் வீட்டில் எப்படி அந்த அம்மா அவருடைய பணத்திற்காக காத்திருப்பாரோ அது போல தான் மயில்சாமி வீட்டிலும் இருக்கும். ஆனால் மயில்சாமி அதை பற்றி கவலைப்படாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் தான் குறியாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

சக மனிதருக்கு உதவும் குணம்
அது மட்டுமல்லாமல் யாருக்காவது படிப்புக்கு உதவி தேவை என்றால் தன்னிடம் பணம் இல்லாத நேரத்தில் நடிகர் சத்யராஜ்க்கு போன் செய்து அவரை தொந்தரவு செய்வார். அது மட்டுமல்லாமல் நடிகர் கமலுக்கு அடுத்ததாக போன் பண்ணுவார், நான் சத்யராஜ் இடம் பணம் கேட்டு இருக்கிறேன் நீங்களும் கொஞ்சம் உதவுங்கள் என்று அப்படி பலரிடமும் பணம் வாங்கி உதவி செய்யும் குணம் கொண்டவர்தான் இந்த மயில்சாமி என்று அவர் சில வருடங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் விவேக் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சக மனிதரை மதித்து அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து நன்மதிப்பை பெற்ற மயில்சாமியின் இறப்பு தமிழ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications