ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவங்கெல்லாம் நடுவரா? என்ன தகுதி இருக்கு? வனிதா கேட்ட கேள்வி.. அது அவங்களா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கும் பிரபலங்கள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதுதான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதிலும் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ரோஜாவும் விஜய் டிவி டான்ஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் சொந்த சகோதரியான நடிகை ஸ்ரீதேவியும் கலந்து கொண்டிருக்கிறார். இவர்களை பற்றி தான் வனிதா பேசுகிறாரா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
வனிதா, நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் சந்திரலேகா படத்தில் விஜய் உடன் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பிறகு 90களில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், அதிக காலம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

வனிதாவின் திருமண வாழ்க்கை
அதற்குப் பிறகு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் சென்ற அவர், பின்னர் விவாகரத்தால் பிரிந்தார். தொடர்ந்து இரண்டு திருமணங்களும் நடந்தாலும், அவையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனால், வனிதாவின் வாழ்க்கை எப்போதும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் இந்த எல்லா அனுபவங்களும் அவரை உடைக்கவில்லை; மாறாக இன்னும் தைரியமாக பேசும் ஒருவராக மாற்றியது.
பிக் பாஸ் கொடுத்த மாற்றம்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் வனிதாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரின் தன்னம்பிக்கை, சண்டைகள், உண்மையை நேராகச் சொல்லும் பழக்கம்-இவை எல்லாம் அவரை மீண்டும் மக்களிடம் பேசப்படும் பெயராக மாற்றின. அதற்குப் பிறகு, பல டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து கலந்து கொண்டார்.
இந்நிலையில், "நான் செய்ய முடியாதது எதுவும் இல்லை" என்ற மாதிரி, இயக்குநராகவும் அவர் முயற்சி செய்தார். Mrs & Mr என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதோடு, அடுத்த படத்தின் 'சிவராத்திரி' பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தது கூட அவருக்கு பெரிய சிக்கலாக மாறியது.
இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகும் வனிதா அமைதியாக இருப்பவர் அல்ல. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்கள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்து அவர் ஓபன் ஆக பேசினார். "பாட்டு நிகழ்ச்சிக்கு பாடகர்கள், டான்ஸ் நிகழ்ச்சிக்கு டான்ஸ் மாஸ்டர்கள் தான் ஜட்ஜாக இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாதவர்களை கொண்டு வந்து உட்கார வைப்பது எனக்கு புரியவில்லை.
சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நாலு படம் நடித்த நடிகைகளை நடுவராக வைக்கிறார்கள். அவர்களுக்கு டான்ஸை பற்றி என்ன தெரியும். அதேபோல சில சமையல் நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள். சமையல் நிகழ்ச்சிக்கு செஃப்பால் மட்டுமே நடுவராக இருக்க முடியும் ஆனால் இங்கே கதையே வேற மாதிரி இருக்கு" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த கருத்து வெளியானதும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை ரோஜா குறித்து தான் அவர் மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று பலர் கூற ஆரம்பித்தனர். இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு விவாதம் கிளம்பியுள்ளது.
ஒரு தரப்பு, "வனிதா சொல்வது தவறில்லை. அந்த துறையில் அனுபவம் உள்ளவர்களே ஜட்ஜாக இருக்க வேண்டும்" என்று ஆதரிக்கிறது. மற்றொரு தரப்பு, "அது ஒரு எண்டர்டெயின்மென்ட் ஷோ. அதற்கு எல்லாரும் வரலாம்" என்று எதிர்ப்பை தெரிவிக்கிறது.
இதற்கிடையில், வனிதா தனது யூடியூப் சேனல் மூலம் சமையல் வீடியோக்கள், வாழ்க்கை அனுபவங்கள், பெண்களின் சுயநினைவு போன்ற விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
மொத்தத்தில் பார்த்தால், வனிதா விஜயகுமார் வாழ்க்கை சினிமாவை விட டிராமாட்டிக்காக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் ஒரு ரியாக்ஷனை உருவாக்குகிறது. அதனால் தான்-அவர் அமைதியாக இருந்தாலும் பேசுவார்கள், பேசினாலும் இன்னும் அதிகமாக பேசுவார்கள்.













Click it and Unblock the Notifications