மாரிமுத்துவின் மாஸ் ரோல்! எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார்?.. திருச்செல்வம் பதில் என்ன?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்துவிட்ட நிலையில் அவருக்கு பதில் இனி அந்த கேரக்டரில் நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் மாரிமுத்து 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் சினிமாவில் நடிப்பதற்காக வந்தார். அங்கு ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோருடன் தங்கியிருந்தார். அவர் இயக்குநர்கள் ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான் உள்ளிட்டோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இதன் பின்னர் புலிவால் எனும் படத்தில் 2014 ஆம் ஆண்டு சப்போர்டிங் ரோல் செய்திருந்தார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
இதில் ஆதிகுணசேகரனாக நடித்து பெண்களை அடிமைப்படுத்தும் கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய மனைவி ஈஸ்வரி படித்திருந்தாலும் அவர் சமையல் வேலை மட்டும்தான் செய்ய வேண்டும். வீட்டு நிர்வாகத்தில் தலையிட கூடாது என நினைக்கும் கேரக்டர். இவர் கொடுமையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருடைய வில்லத்தனத்தை மக்கள் ரசித்தார்கள்.
இவருக்கென தனி ஆர்மி இருக்கிறது. இவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். பெண்ணடிமை என்பதை ஏற்க முடியாத ஒன்று என்றாலும் அந்த கேரக்டரில் அவர் நடித்த விதம் அனைவருக்கும் பிடிக்கும். கலையை கலையாக பார்க்க வேண்டும் என நினைப்பார்கள் ஆதி குணசேகரனை ரசிப்பார்கள், மற்றவர்கள் திட்டுவார்கள்.
இந்த நிலையில் இன்று காலை டப்பிங் முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து 9 மணிக்கு வேறு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் செல்ல வேண்டுமாம். ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் அவருடைய வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் எல்லாம் வந்துவிட்டனர். இயக்குநர் திருச்செல்வமும் அங்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு பேரிழப்பு.

அவருடைய குடும்பத்தினரை எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என தெரியவில்லை. யதார்த்தவாதி, எதையும் மனதில் வைத்துக் கொண்டு பேச மாட்டார். ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட ஏன் சார் அப்படி பேசினீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் சார் நான் எதையும் பிளான் செய்து பேசவில்லை.
ஏதோ பேசும் போது சில வார்த்தைகள் அதிகமாக வந்துவிட்டது என்றார். அது போல் ஒரு பேட்டியில் என்னை சார் சார் என கூறிவிட்டு திடீரென அவன் என கூறியிருப்பார். இதெல்லாம் சகஜம். இதை பெரிதுப்படுத்தாதீர்கள் என்றார். அடுத்த குணசேகரன் யார் என்ற கேள்விக்கு திருச்செல்வம் பதிலளிக்கையில், இதுகுறித்தெல்லாம் இப்போது முடிவு செய்ய முடியாது. இதுகுறித்து பேச வேண்டிய நேரமும் இது இல்லை என கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications