பாடகி ஸ்வாகதாவிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனர் யார்? மூன்று வருஷத்துக்கு முன்பே அவர் போட்ட போஸ்ட்!
சென்னை: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் அவர் பிரபல இயக்குனர் கொடுத்த பாலியல் தொந்தரவுகள் பற்றி பகிர்ந்த தகவல்கள் வைரலாகி இருந்த நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள பழைய சமூக வலைதள பதிவுகள் இந்த விவகாரத்தை மேலும் விவாதிக்க வைத்திருக்கிறது.

பழைய பதிவு
ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் 2023-ம் ஆண்டு வெளியிட்ட ஒரு பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த சம்பவம் நடந்தது 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதை நினைத்தாலே நடுங்குகிறேன். அழுகை வருகிறது. மீண்டும் என் மன வலிமையை பெற மாதங்கள் மாதங்களாக தெரபி எடுத்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, "நான் அனுபவித்ததை நினைத்தாலே இப்படியிருக்கிறது... இப்போது இப்படியான சூழ்நிலையில் இருக்கும் மாணவிகள் என்ன நிலைமையில் இருப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். #abusersbelonginjail என்ற ஹேஷ்டேக் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்போதே அவர் போட்ட போஸ்டை இப்போது அவர் ஷேர் செய்து இருக்கிறார்.
பேட்டியில் கூறிய அதிர்ச்சி தகவல்கள்
சிவகங்கரி டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஸ்வாகதா மிகவும் அதிர்ச்சிகரமான விஷயங்களை பேசி இருந்தார். அவர் கூறியதாவது, தன்னுடன் பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர், வேலை வாய்ப்பு கொடுத்து அணுகி, பின்னர் சம்பளம் கொடுக்காமல், தன்னிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறினார். ஆரம்பத்தில் நம்பிக்கை வருவது போல நடந்து கொண்ட நபர் தொடர்ந்து தன்னிடம் வரம்பு மீறி நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், தனது ஸ்டூடியோவுக்கு அழைத்து, அங்கு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அதிர்ச்சியாக, "இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டினார். என்னைப் போல பல பெண்களின் வீடியோக்களையும் வைத்திருக்கிறார். அவற்றைப் பார்ப்பது அவரின் பழக்கம்" என்று கூறியுள்ளார். இந்த தகவல்கள் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் அதிகமான விவாதங்கள் உருவானது.

சினிமாவை விட்டு விலகிய காரணம்
இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் சினிமாவை விட்டு விலகியதாகவும், ரிஷிகேஷ் சென்று புதிய வாழ்க்கையை தொடங்கியதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார். "கங்கையில் மூழ்கி புதிதாக பிறந்த மாதிரி வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆனால் என்னை பாதித்த அந்த நபரை சட்டப்படி தண்டிக்காமல் விடமாட்டேன்" என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

யார் அந்த இசையமைப்பாளர்?
இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதும், "அந்த இசையமைப்பாளர் யார்?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பெரிதாக எழுந்துள்ளது. ஸ்வாகதா நேரடியாக பெயர் சொல்லவில்லை என்றாலும், அவர் கொடுத்த தகவல்கள் மற்றும் குறிகள் அடிப்படையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு
இந்த விவகாரத்தில் பாடகிக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "இது யாருடைய பெயரை கெடுக்க பேசப்படுவது இல்லை. ஸ்வாகதா சொன்னதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அந்த இசையமைப்பாளரின் தவறான செயல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பல இளம் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதனால் இது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். போலீசிடம் சென்றால் சில நிமிடங்களிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கருத்து
இந்த சம்பவம் குறித்து பலரும் ஸ்வாகதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். "இது போன்ற விஷயங்கள் வெளியில் வருவது அவசியம்" என்று கூறும் குரலும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளிவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஸ்வாகதா பகிர்ந்த பழைய பதிவு, அவர் அப்போதே அனுபவித்த மன உளைச்சலை வெளிப்படுத்தும் ஒரு உண்மையான சாட்சியாக மாறியுள்ளது. இந்த விவகாரம், சினிமா துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
இனி இந்த வழக்கு சட்ட ரீதியாக எந்த திசையில் செல்லும்? குற்றச்சாட்டில் கூறப்பட்ட அந்த நபர் வெளிச்சத்திற்கு வருவாரா? என்பதற்கான பதிலை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications