யூடியூப்பில் அடித்து விடுறாங்க, ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகிய உண்மை காரணம் இதுதான்! ரமேஷ் கண்ணா ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் மாஸ் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் சுந்தர்.சி. சமீபத்தில், அவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க போவதாகவும், அந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்க போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, சுந்தர்.சி அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்கு பின்னால் உள்ள உண்மை
சுந்தர்.சி விலகியதுக்கான காரணம் குறித்து யூடியூப்களில் பலரும் பலவிதமாகக் கதைகளை பேசி வந்த நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு நேர்காணலில் அதற்கான உண்மையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். ரமேஷ் கண்ணா பேசியதாவது, "இயக்குநர் சுந்தர்.சி முன்பே இரண்டு படங்களில் கமிட்டாகிவிட்டார் என்பது உண்மை. அந்த இரண்டு படங்களை விட்டுவிட்டுப் போனால் நன்றி கெட்டத்தனமாக இருக்கும் அல்லவா. பெரிய நடிகர் படம் கிடைத்துவிட்டதால் விட்டு சென்றதாகக் கூறுவார்கள் அல்லவா" என்று உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார்.
காலம் இல்லை
மேலும், "ரஜினி-கமல் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு ஏற்ற கதை கிடைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால், இவர்கள் கொஞ்சம் சீக்கிரமாக படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். சுந்தர்.சி சாரால் ரஜினி படத்தை உடனே செய்ய நேரம் இல்லை. அதனால்தான் அவர் விலகிவிட்டார்" என்று தெளிவாகப் பேசியிருக்கிறார்.
உலக மகா சாதனை
ரமேஷ் கண்ணா தொடர்ந்து பேசும்போது, ரஜினி-கமல் இணைவை பற்றியும் பேசினார். "கமல் சார் தயாரிப்பில் ரஜினி சார் நடிக்கிறார். ரஜினி சார் நண்பருக்கு உதவுகிறார். கமல், ரஜினியை சேர்த்து வைத்து படம் பண்ணுவது என்பது நடக்காத காரியம். அதைச் செய்துவிட்டார்கள் என்றால் அது உலகமகா சாதனை (ரெக்கார்டு)" என்று ரமேஷ் கண்ணா பாராட்டியுள்ளார்.
சரியான கதை தேவை
யூடியூபில் வருவதுபோல வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும், கமல்-ரஜினி கூட்டணிக்கு படம் பண்ண வேண்டும் என்றால் நல்ல கதை வேண்டும், அது வெற்றியாக வேண்டும், அதற்கு நேரம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது சுந்தர்.சி நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், ரஜினிப் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியதும், அவர் இரண்டு படங்களில் கமிட் ஆகிவிட்டதால் இனிமேல் அந்தப் படங்களை விட்டுவிட்டுப் போகக் கூடாது என்ற நல்ல முடிவை எடுத்துள்ளார் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சமீபத்தில் நடிகை குஷ்பு, நடிகர் கமலை தனிப்பட்ட ரீதியில் நேரில் சந்தித்து இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலானதும், இந்த சந்திப்பும்கூட ரஜினி படம் குறித்து இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.












Click it and Unblock the Notifications