கோவாக்சின் வாக்சின்.. யார் இந்த கிருஷ்ணா எல்லா... தமிழகத்துடன் இவருக்கு என்ன தொடர்பு?
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து வருமா? வராதா? என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் 'கோவாக்சின்' பெயரில் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர். கிருஷ்ணா மூர்த்தி எல்லா என்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை.
தமிழ்நாட்டின் திருத்தணியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று உலகையே ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதன் மூலம் உலக அரங்கில் இவரது பெயர் பேசப்பட்டு வருகிறது.
பாரத் பயோடெக்:
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட 'பாரத் பயோடெக்' நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையத்துடன் இணைந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து, மனிதர்களிடம் இந்த தடுப்பு மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் லிமிடெட்டின் நிறுவனராக கிருஷ்ணா எல்லா இருக்கிறார். இதுமட்டுமில்லை. எல்லா பவுண்டேஷன், ஜெனோம் வேலி ஆகியவற்றின் நிறுவனராகவும் இருக்கிறார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார்.
குடும்ப பின்னணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1969ல் கிருஷ்ணா எல்லா பிறந்தார். தற்போது அவருக்கு வயது 51. திருமணமாகி சுசித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பெயர் ரிசாஸ் வீரேந்திர தேவ். பட்டப்படிப்பை முடித்தவர் பேயர் என்ற மருந்து நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் உதவித் தொகை பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி முடித்தார்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் முடித்தார். அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்தார். ஆனால், அவரது தாயின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்பினார்.
வெறி நாய்க்கடி தடுப்பு ஊசி:
ஐதராபாத்தில் 1996ல் சிறிய பரிசோதனை கூடத்தை ஹெபடிடிஸ் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டார். போட்டி நிறுவனங்கள் இந்த தடுப்பு ஊசி ஒன்றுக்கு 40 டாலர் என்று விலை நிர்ணயிக்க, ஒரு டாலருக்கு தருகிறேன் என்று கிருஷ்ணா எல்லா அறிவித்தார். வங்கியில் இரண்டு கோடி ரூபாய் கடன் பெற்று மருந்து தயாரித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மலிவு விலையில் வெறி நாய்க்கடிக்கு தடுப்பு மருந்து கொண்டு வந்ததற்கு கிருஷ்ணா எல்லாவை வெகுவாக பாராட்டினார். உலகிலேயே அதிகளவில் இந்த தடுப்பு மருந்தை தயாரித்த நிறுவனம் என்ற பெயரை பாரத் பயோடெக் பெற்று இருந்தது.
சிகா வைரஸ் தடுப்பு மருந்து:
இவரது பாரத் பயோடெக் நிறுவனத்தில் 1600 பேர் பணியாற்றுகின்றனர். 200 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார். குறைந்த விலையில் தடுப்பு மருந்துகளை தயாரிக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள். இந்த நிறுவனம்தான் போலியோ, ரோட்டாவைரஸ், ஜப்பானிஷ் என்செஃபலிடிஸ், சிகா வைரஸ் ஆகிய தொற்று நோய்களுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருந்தது.
விவசாயம்:
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் பயனளிக்க பயோவெட் அண்ட் இன்னோவா புட் பார்க் என்ற நிறுவனத்தை கிருஷ்ணா எல்லா துவக்கி இருக்கிறார். விவசாயத்தில் தரம் மற்றும் வளர்ச்சியை எட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த பார்க்கை துவக்கி உள்ளார்.
பரிசோதனை அடிப்படையில் முதல் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மருந்தை செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள் வரும் 13ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டு என்று இந்திய மருத்துவக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நெட் வொர்த்:
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நெட் வொர்த் ரூ. 100 கோடியாக இருக்கிறது.