ரூ.10 கோடி பரிசு யாருக்கு அடிக்க போகுதோ தெரியல?.. 'சம்மர் பம்பர்” லாட்டரியை அறிவித்த கேரளா!
திருவனந்தபுரம்: நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. அங்கு தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. நாளை மறுநாள் இதற்கான குலுக்கல் நடைபெறும் நிலையில், அடுத்ததாக 'சம்மர் பம்பர்' லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ய கேரள அரசு ஆயத்தமாகி வருகிறது. ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட இந்த சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுக்கான விலையானது ரூ.250 ஆகும். மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகளை அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.34 கோடி வழங்கப்பட உள்ளது.
கேரளாவில் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெறுவது போக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஒணம் பம்பர், பூஜா பம்பர் என ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகள் அச்சடித்து விற்பனை செய்யப்படுகிறது.

சம்மர் பம்பர் லாட்டரி
இந்த பம்பர் லாட்டரிகளுக்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இதனால் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குவதை பார்க்க முடியும். தங்களுக்கும் ஒருநாள் அதிர்ஷ்ட தேவதை கண் திறக்காதா என்ற ஆசையுடன் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
பம்பர் குலுக்கலில் அதிகபட்சமாக ஒணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. கடந்த ஓணம் பம்பரில் முதல் பரிசு கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு கிடைத்தது. தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் குலுக்கல் நடைபெற உள்ளதால் நியூ இயர் லாட்டரி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை கேரள அரசு அறிவித்துள்ளது.
முதல் பரிசு ரூ.10 கோடி ரூபாய்
சம்மர் பம்பர் லாட்டரி (BR 102) டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். இந்த லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.34 கோடி வழங்கப்பட உள்ளது. அச்சடிக்கப்படும் மொத்த டிக்கெட்டுகளின் மதிப்பு ரூ.105.47 கோடியாகும். முதல் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும்.
ஏஜெண்ட் கமிஷனாக ரூ.1 கோடி அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக ரூ.50 லட்சம் வழங்கப்படும். சமூக நலத்திட்டங்களுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் சம்பர் பம்பர் லாட்டரி விற்கப்படுகிறது என்று கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் குலுக்கல் முடிந்த ஓரிரு நாட்களில் சம்மர் பம்பர் குலுக்கல் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஃப்டி பிஃப்டி லாட்டரி
இந்த பம்பர் லாட்டரி போக தினமும் 40 ரூபாய் கொண்ட லாட்டரி சீட்டுக்களும், புதன்கிழமை மட்டும் ரூ.50 கொண்ட லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. புதன்கிழமை விற்கப்படும் லாட்டரி சீட்டுக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி முதல் பரிசு ஆகும். மற்ற நாட்களில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். இதனால் தினமும் கேரளாவில் ஒருவர் லட்சாதிபதி ஆகி வருகிறார்.












Click it and Unblock the Notifications