உலகை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு: இன்னும் 206 பேரை காணவில்லை! கேரள முதல்வர் பினராயி விஜயன் ஷாக் தகவல்
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கியது. நிலச்சரிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும், இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிகனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் அடியோடு அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்தது. சுமார் 500 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை நவீன எந்திரங்கள், மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆவதால் பல இடங்களில் துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. அந்த இடங்களில் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. பிணமாக மீட்கப்பட்டவர்களில் பலர் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்துள்ளனர். இதனால் மாயமான உறவினர்களை தேடுபவர்களின் டி.என்.ஏ. மற்றும் இறந்தவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதித்து உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியை பஞ்சாயத்து நிர்வாகம் மேற்கொள்ளும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு, நிலம் வழங்க பலர் முன் வந்திருப்பது அவர்களின் அன்பைக் காட்டுகிறது.
தீயணைப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, வனத்துறை, காவல் துறை, ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினர் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மனித மீட்பு ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான ரேடார் போன்ற மேம்பட்ட கருவிகள் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சூரல்மலையில் 866 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு பாதுகாப்பான பகுதி கண்டறியப்பட்டு அங்கு நகரமைப்பு உருவாக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை கல்வி அமைச்சர் பார்வையிட்டு, குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.
காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. கோட்டயத்தில் காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கான நிறுவனம் நிறுவப்பட உள்ளது. இந்த நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications