வயநாடு நிலச்சரிவு: 206 பேர் கதி என்ன? சாலியாறு ஆற்றில் இடைவிடாமல் தேடும் மீட்பு குழு!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 206 பேர் கதி என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை என அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். காணமல் போன 206 பேரின் உடல்கள் சாலியாறு ஆற்றில் அடித்துவரப்பட்டதா? என 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
கேரளா மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை, அட்டால் மலை, மெப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது. 1000-க்கும் அதிகமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயின. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்று 6-வது நாளாக பாதுகாப்பு படையினரும் பேரிடர் மீட்பு குழுவினரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்றும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே வயநாடு மீட்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் முகமது ரியாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சாலியாறு ஆற்றில் உடல்கள் அடித்துவரப்பட்டன. சிலரது உடல் பாகங்கள் மட்டும் அடித்துவரப்பட்டன. இதனால் தற்போது சாலியாறு ஆற்றில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாலியாறு ஆறானது வயநாடு, மலப்புரம், கொழிக்கோடு மாவட்டங்கள் வழியாக மலப்புரம் நிலாம்பூர் என்ற இடத்தை சென்றடைகிறது. நிலாம்பூரில்தான் சாலியாறு ஆற்றில் மிதந்த உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் சாலியாறு ஆற்றில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் இடிபாடுகளை அகற்றும் பணியும் தொடருகிறது. இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்கின்றனரா? இடிபாடுகளில் உடல்கள் இருக்கின்றனவா? எனவும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
இதனிடையே வயநாடு நிலச்சரிவி பகுதிகளில் மீட்புப் பணிகளை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது, வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications