இந்தியாவின் இளம் வயது மேயர்... 21 வயதில் திருவனந்தபுரத்தின் மேயராகும் சட்டக் கல்லூரி மாணவி...
திருவனந்தபுரம்: கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதேபோல மாநில தலைநகர் திருவனந்தபுரத்தையும் இடதுசாரிகளே கைப்பற்றினர். இருப்பினும், மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்ட இரு இடதுசாரி வேட்பாளர்கள் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தனர்.
அடுத்தகட்டமாக பெரூர்கடா வார்டில் வெற்றிபெற்ற மூத்த வேட்பாளர் ஜமீலா ஸ்ரீதரனின் பெயர் மேயர் ரேஸில் பரிசிலினை செய்யப்பட்டது. இருப்பினும், இளைஞர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து தலைநகர் முழுவதும் எழுந்தது.
அதைத்தொடர்ந்து, 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் மேயராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வாட்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நாட்டிலேயே இளம் வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆர்யாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். அரசியல் களத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும், அவர் தற்போது சிபிஎம்மின் குழந்தைகள் பிரிவான பாலசங்கத்தின் கேரள மாநில தலைவராகவும் உள்ளார்.
தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஆர்யா கூறுகையில், "கட்சி எனக்கு அளித்துள்ள பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது படிப்பையும் அரசியல் பணிகளையும் ஒரு சேர மேற்கொள்ளவுள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications