ஒரே நாளில் 3 பெண்களால் பரபரப்பு.. அல்லோகல்லப்பட்ட சபரிமலை!
திருவனந்தபுரம்: சபரிமலை இன்று 3 பெண்களால் அல்லோகல்லப்பட்டுப் போனது. சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தினசரி சில பெண்கள், சபரிமலை சன்னிதானத்திற்கு வர முயற்சி செய்தபடி உள்ளனர். ஆனால் இந்து அமைப்பினரின் கடுமையான போராட்டங்கள் மற்றும் மிரட்டலால் இது நடக்க முடியாத நிலை நிலவுகிறது. இன்று 3 பெண்களால் சபரிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
சபரிமலை சன்னிதானத்திற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வர அனுமதி இல்லை. இதை உடைக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு வரலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை அமல்படுத்த முடியாத அளவுக்கு பாஜக தலைமையில் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
தடையை மீறி கோவிலுக்குள் செல்ல பெண்கள் சிலர் முயன்றும் கூட அது முடியவில்லை. தோல்வியிலேயே முடிந்துள்ளது. இன்று கேரளாவைச் ரெஹனா பாத்திமா, மேரி ஸ்வீட்டி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கவிதா ஆகியோர் சபரிமலை சன்னிதானம் செல்ல முயன்று தோல்வியுற்றனர். இவர்களால் இன்று சபரிமலையில் பெரும் பரபரப்பாக போய் விட்டது.
[சபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..!]

பத்திரிகையாளர் கவிதா
ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா. சபரிமலை சன்னிதானம் வரை நெருங்கிப் போயும் கூட உள்ளே போக முடியாமல் திரும்ப நேரிட்டது. 24 வயதாகும் கவிதா, தன்னால் கோவிலுக்குள் போக முடியாவிட்டாலும் கூட வரலாறு படைத்து விட்டதாக பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

மீண்டும் சபரிமலை வருவேன்
சபரிமலைக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். இன்று மிகவும் அபாயகரமான சூழலை நாங்கள் சந்திக்க நேரிட்டது. 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தோம். சன்னிதானத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தடுத்து விட்டனர். போலீஸார் எங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்தனர். மீண்டும் நான் சபரிமலைக்கு வருவேன். அமைதி திரும்பியதும் வருவேன் என்றார் அவர்.

பக்கா தயார் நிலையில்
எதற்கும் அஞ்சாதவராக வந்திருந்தார் கவிதா. புல்லட் ப்ரூப் உடை அணைந்து, தலையில் ஹெல்மெட்டும் போட்டிருந்தார். அவர் மற்றும் ரெஹனாவைச் சுற்றிலும் 300 போலீஸார் சூழ்ந்து பாதுகாப்பாக வந்தனர். பம்பையிலிருந்து இருவரும் சன்னிதானத்திற்கு நடந்தே வந்தனர். ஒரு குழந்தைக்குத் தாயான கவிதா, தனது முயற்சிகளுக்கு கேரளா முதல்வரும், காவல்துறையினரும் ஆதரவு தெரிவித்து, பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி கூறியுள்ளார்.

கொச்சி ரெஹனா
இன்னொரு பெண் கொச்சியைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா. இவரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில் சபரிமலைக்கு வந்திருந்தார். ஆனால் இவராலும் போக முடியவில்லை. இவர் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்ததாக கூறினார். ஒரு பக்தராக இருக்க என்ன தகுதி என்பதை தேவஸ்தானம் விளக்கம் வேண்டும் என்று ரெஹனா கூறியுள்ளார்.

மேரி ஸ்வீட்டியால் புதிய பரபரப்பு
இப்படி இரு பெண்கள் ஒருபக்கம் சன்னிதானம் வரை நெருங்கிய நிலையில் கேரளாவைச் சேர்ந்த மேரி ஸ்வீட்டி என்ற பெண் பம்பையில் பரபரப்பைக் கிளப்பினார். இவரும் சபரிமலைக்கு செல்வதற்காக கிளம்பியவர்தான். ஆனால் இவரிடம் போலீஸார், எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது. உங்களது ரிஸ்க்கில் போக வேண்டும் என்று கூறி விட்டனர்.
|
பம்பையுடன் தடுத்து நிறுத்தம்
ஆனாலும் தைரியமாக முன்னேறிச் சென்றார் மேரி ஸ்வீட்டி. ஆனால் இவரால் பம்பை வரை மட்டுமே போக முடிந்தது. அங்கு போராட்டக்காரர்கள் இவரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

46 வயது ஸ்வீட்டி
ஸ்வீட்டிக்கு 46 வயதாகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர். நான் சர்ச்சுக்குச் செல்கிறேன். மசூதிகளுக்கும் போகிறேன். எல்லாக் கோவில்களுக்கும் போகிறேன். ஏன் சபரிமலைக்கு மட்டும் நான் போகக் கூடாது என்று கோபமாக கேட்கிறார் ஸ்வீட்டி. போராட்டக்காரர்கள் தடுத்ததால் போக முடியாமல் திரும்ப நேரிட்ட ஸ்வீட்டி, போலீஸார் உரிய முறையில் ஏற்பாடுகள், பாதுகாப்புகளை கொடுக்காத காரணத்தால்தான் பெண்களால் சபரிமலை சன்னிதானத்திற்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
மொத்தத்தில் 3 பெண்களின் சன்னிதானம் செல்லும் முயற்சிகளால், சபரிமலையே அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டது.












Click it and Unblock the Notifications