“நோ” சொன்ன இந்தியன்ஆயில்.. கடனால் கதிகலங்கும் கேரள அரசு! டீசல் இன்றி 50% அரசு பஸ்கள் நிறுத்தம்
திருவனந்தபுரம்: கேரள அரசு பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுத்தியதால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு 50% அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
தமிழ்நாடுபோல் கேரளாவில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கேரள அரசுக்கு தினசரி ரூ.6.5 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
இதில் டீசலுக்காக மட்டும் ரூ.3 கோடியை கேரள அரசு செலவு செய்கிறது. இதற்கான தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி கேரள அரசு வழங்கினாலும் கடன் மற்றும் வட்டி அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

கடன் பாக்கி
இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்கு கேரள அரசின் மாநில போக்குவரத்துக் கழகம் ரூ.135 கோடியை கட்டண பாக்கியாக வைத்து இருக்கிறது. கேரள அரசின் கடனும் வட்டியும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

டீசல் தர மறுப்பு
இதன் காரணமாகவே கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி கட்டணம் செலுத்தி எரிபொருளை எண்ணெய் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எண்ணெய் நிறுவனத்துக்கு கேரள அரசு செலுத்த வேண்டிய ரூ.123 கோடி கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.139 கோடியை வழங்காமல் டீசல் தர முடியாது என்று மறுத்து இருக்கிறது.

பேருந்து சேவை நிறுத்தம்
இதனால் கேரள போக்குவரத்துக் கழகத்திடம் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பேருந்து சேவைகளை போக்குவரத்துக் கழகம் குறைத்து வந்த நிலையில், தற்போது 50 சதவீத அரசு பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் பாதிப்பு
இதன் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், சிறு குறு வியாபாரிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் நீண்ட தூரம் செல்லும் பயணிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நிலையை இவ்வாறு இருக்க கனமழை காரணமாகவே பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications