மூதாட்டி முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி.. பாலியல் வன்கொடுமை, நகை கொள்ளை.. கேரளாவில்
திருவனந்தபுரம்: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை எல்லா தரப்பு பெண்களும் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள் என்பதையே ஒவ்வொரு சம்பவமும் உணர்த்துகின்றன. கேரளாவில் 70 வயது மூதாட்டியிடம் நகையை திருடி பாலியல் வன்கொடுமை செய்து முகத்தில் மிளகாய் பொடியை கொட்டி துன்புறுத்தல் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா மருத்துவக்கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு அதிர்ச்சியில் இருந்தே நாடு மீளவில்லை. அதற்குள் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி பயத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்க செய்து கொண்டிருக்கின்றன. உத்தரகாண்ட் செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை, மருத்துவமனைக்குள் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை, கேரளத்தில் நோயாளி இருவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் என்று பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பாலியல் வன்கொடுமைகளில் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. மகாராஷ்டிர மாநிலம், தானே, பத்லாப்பூர் பள்ளியில் படித்து வந்த நான்கு வயது மட்டுமே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது.
அந்த சம்பவம் ஓய்வதற்குள்ளேயே மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள பள்ளியின் கேண்டீனில் பணிபுரியும் 16 வயது சிறுவன், பள்ளி வளாகத்தில் ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் தன்னுடைய வீட்டில் இருந்த 70 வயது மூதாட்டிக்கு நடந்துள்ள கொடுமை பதைபதைக்க வைக்கிறது.
கணக்கக்கண்ணு பகுதியைச் சேர்ந்த 29 வயதேயான தினேஷ் என்பவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். இதை நன்கறிந்த தினேஷ் அவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க துணிந்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு தினேஷ் மூதாட்டி வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தொடர்ந்து மூதாட்டியிடம் 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
தினேஷை தடுத்து நிறுத்துவதற்கு மூதாட்டி போராடியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தினேஷ் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை கொட்டியுள்ளார். இதில் மூதாட்டி நிலைகுலைந்து போயிருக்கிறார். இந்த சம்பவத்தின் போது தினேஷ் மூதாட்டியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.
பிறகு தினேஷ் வீட்டின் வெளிப்பக்க கதவை பூட்டி மூதாட்டியின் செல்போனையும் எடுத்து சென்றுவிட்டார். இதன் காரணமாக மூதாட்டியால் யாரையும் தொடர்பு கொள்ள முடியில்லை. அக்கம் பக்கத்தினர் தான் காலையில் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் தினேஷை தேடி வந்தனர்.
தினேஷ் அந்த திருடிய நகைகளை விற்க முயற்சி செய்யும்போது அவனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications