2 ஹெலிகாப்டர் வந்தும் பயனில்லை! கேரள மலையில் சிக்கியிருந்த இளைஞர் மீட்கப்பட்டது எப்படி? பரபர வீடியோ
திருவனந்தபுரம்: பாலக்காடு மழப்புழா மலையில் டிரெக்கிங் செல்லும் போது மாணவர் ஒருவர் மலைமுகட்டில் சிக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 46 மணி நேரமாக அந்த மாணவர் மலைமுகட்டில் சிக்கி போராடிக்கொண்டு இருந்த நிலையில் ராணுவம் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கேரளா மாநிலம் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு இருக்கும் குறம்பாச்சி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய சென்று இருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன் தனது மூன்று நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார். ஆனால் மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார்.

மலை முகடு
ஆனால் அதிர்ஷ்ட வசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பித்து உள்ளார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும் அமைப்பு ஆகும் இது. ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துள்ளார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 46மணி நேரமாக அந்த மலை யுகத்தில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்தார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் முயன்று உள்ளனர்.

புகார்
அங்கு இருந்த குச்சி, கம்புகள், கயிறுகளை வைத்து அவரை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கீழே வந்த நண்பர்கள் உள்ளூர் ஆட்களிடமும், தீயணைப்பு துறையிடமும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 7ம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படவில்லை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி இப்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது.

மீட்பு பணி
பாபு இருக்கும் முகட்டு பகுதி யாராலும் எட்ட முடியாத இடத்தில் உள்ளது. கயிறு மூலம் அவரை தொட முடியவில்லை. இதையடுத்து அவரை காப்பாற்ற கொச்சி கடலோர காவல் படை ஹெலிகாப்டர் களமிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் வந்தும் கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. மலை முகடு கரடு முரடாக இருப்பதால் ஹெலிகாப்டர் பாபு இருக்கும் பகுதிக்கு அருகில் செல்ல முடியவில்லை.

ஹெலிகாப்டர்
இதையடுத்து தற்போது பாலக்காடு ஆட்சியர் கடற்படையின் உதவியை நாடினார். கடற்படை பயன்படுத்தும் நவீன ஹெலிகாப்டர்களை வைத்து அவரை மீட்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களின் ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக களமிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து கயிறை வீசி அதை பிடித்து மேலே வரும்படி பாபுவிற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார். ஆனால் மலை முகட்டில் இருந்து கையை பிடிக்க முடியாத காரணத்தால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

பிடிக்க முடியவில்லை
இரண்டு ஹெலிகாப்டர் வந்தும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மீட்பு பணியில் களமிறங்கி உள்ளது. 43 மணி நேரமாக பாபு தண்ணீர் குடிக்கவில்லை. இரவு முழுக்க அங்கேயே தூங்காமல் இருந்துள்ளார். எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர், தண்ணீர் என்று மலை முகட்டில் அமர்ந்து கொண்டு பாபு கத்தும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

தண்ணீர் இல்லை
இதனால் உடல் ரீதியாக அவர் மிகவும் நலிவுற்று காணப்பட்டார். டிரோன் மூலமும் பாபுவிற்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவர் மிகவும் சிக்கலான இடத்தில் இருக்கிறார் என்பதால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அதிகாரிகள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி இருந்தனர். மலைமுகட்டில் சிக்கி பாபு போராடி வரும் வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவர் தான் சிக்கிய புகைப்படங்களை வாட்ஸ் ஆப் மூலம் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து வந்தார்.

ராணுவம்
இதையடுத்தே ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெங்களூரில் இருந்து மலையில் ஏறும் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கே வந்த ராணுவத்தினர் வேகமாக கயிறு கட்டி கீழே இறங்கி முகட்டிற்கு சென்றனர். ராணுவத்தின் இன்னொரு பிரிவினர் மலையின் கீழே இருந்து கொண்டு மேலே ஏறினர். யார் முதலில் முகட்டு பகுதிக்கு செல்கிறார்களோ அவர்கள் மீட்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

உணவு
மலையின் மேல் பகுதியில் இருந்து கயிறு கட்டி இறங்கிய ராணுவத்தினர் மலை முகட்டு பகுதிக்கு வெற்றிகரமாக சென்று அவருக்கு உணவு வழங்கினர். இன்று காலை 9.30 மணி அளவில் உணவு வழங்கப்பட்டது. பின்னர் 30 நிமிடம் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை 10 மணிக்கு கயிறு கட்டி ராணுவத்தினர் தூக்கினர். பாதுகாப்பு உபகரணங்களுடன் அவரை கயிறு கட்டி தூக்கினர். 10.10 மணிக்கு அவர் பாதுகாப்பாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications