கேரளத்தில் பரவும் குரங்கு அம்மை.. இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி.. தீவிர கண்காணிப்பு
திருவனந்தபுரம்: உலக அளவில் குரங்கு அம்மை தொற்று நோய் பொது சுகாதார அவசர நிலையாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில்,குரங்கம்மை தொற்று (எம் - பாக்ஸ்) வேகமாகப் பரவி வரும் நிலையில், உலகளவில் குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, வீக்கம், உடல் வலி, தசைவலி போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகள் ஆகும். இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படும்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று செப்டம்பர் 18 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடவன்னா பகுதியைச் சேர்ந்த இவர் துபாயில் இருந்து அண்மையில் தனது சொந்த ஊரான கேரளத்துக்கு வந்துள்ளார். அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்ட நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில், கோவை மாவட்ட எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
இந்தியாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தொற்று கிளேடு 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இரண்டாக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்தியாவில் இந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஏற்கனவே கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மாநில எல்லைப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications