குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியை கடித்த பாம்பு? மருத்துவமனையில் இளைஞர் அனுமதி
திருவனந்தபுரம்: குருவாயூர்-மதுரை விரைவு ரயிலில் பயணியை பாம்பு கடித்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி விசாரித்த போலீசார், பாம்பு கடித்ததா? அல்லது எலி கடித்ததா என்று சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
மதுரை குருவாயூர் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கமாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் காலை 11.20க்கு புறப்பட்டு, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவிற்குள் நுழைந்து, அங்கு அரியங்காவு , புனலூர், கொட்டரக்கரா, கொல்லம், செங்கனூர், சங்கானச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம். ஆலுவா, திருச்சூர் வழியாக குருவாயூரை மறுநாள் அதிகாலை 2.10க்கு அடைகிறது.மறுமார்க்கமாக குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ், குருவாயூரிலிருந்து காலை புறப்பட்டு, அன்று இரவே மதுரை சென்றடைகிறது.

இதனிடையே நேற்று காலை கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து 9.30 மணியளவில் விரைவு ரயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்திருக்கிறார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார்.
பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரயில்வே ஊழியர்கள், போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது அதில் பாம்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி, ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் மற்ற பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications