ஸ்கூட்டரில் பயணம்.. படகு பயணம்.. மலையேற்றம்.. கொம்பை ஊனி இறங்கி.. கேரளா டீச்சர் செய்ததை பாருங்க!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று ஆசிரியை ஒருவர் அவரது பள்ளியில் போய் கொடியேற்றினார். சரி இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.
திருவனந்தபுரத்தில் அம்புரியை சேர்ந்தவர் உஷா குமாரி. இவர் அகஸ்தியர்கூடம் வனத்திற்குள்பட்ட குன்னத்து மாலா பகுதியில் அகஸ்திய ஏக அத்யாபாக வித்யாலயா என்ற பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் அங்கு 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
1999-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட பள்ளிகளை மாநில அரசு தொடங்கியது. அதன்படி உஷாகுமாரி பணியாற்றும் பள்ளியும் தொடங்கப்பட்டது.

நீண்ட பயணம்
இவர் தினமும் 7.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கும்பிக்கல் கடவு என்ற பகுதிக்கு செல்வார். அங்கு படகு மூலம் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்வார். பின்னர் அவர் நீண்ட தூர மலையேறுவார். இதைத் தொடர்ந்து ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மலையிலிருந்து இறங்குவார். அப்போது அவருடன் பள்ளி மாணவர்கள் யாரேனும் வந்தால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வார்.

சில நேரம்
சில நேரங்களில் கனமழை பெய்யக் கூடு.ம் சில நேரங்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அந்த நேரங்களில் தனது மாணவிகளின் வீட்டில் தங்கிக் கொள்வாராம். இல்லாவிட்டால் அடுத்த நாள் பள்ளிக்கு வரமுடியாது என்பதால் அவர் அங்கு தங்கிக் கொள்வாராம். இவர் ஆசிரியை மட்டும் அல்ல. மாணவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.

மதிய உணவு
மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டையும் பாலும் கிடைக்க செய்தவர். குழந்தைகளுக்கு கஞ்சி தயார் செய்ய ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உஷா குமாரி விடுமுறையில் இருந்தால் அந்த பெண, பள்ளியை திறந்து மாணவர்களுக்கு கஞ்சி சமைத்து கொடுப்பார். எம்ஜி கல்லூரியைச் சேர்ந்த ஒரு குழுவினர் குழந்தைகளுக்கு காலை உணவை அளிப்பார்கள். இதை அவர்கள் 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்கள்.

கலாசாரம்
இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை உள்ளது. உஷா அனைத்து பாடங்களையும் எடுக்கிறார். இதுமட்டுமல்லாமல் விளையாட்டு, கலாச்சாரம், ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார். வழக்கமான பள்ளிகளுக்கு இந்த மாணவர்கள் போட்டி போடும் அளவிற்கு அவர்களை தயார் செய்கிறார். இப்படி தினமும் சவால்களுடன் பயணிக்கும் உஷா குமாரி இன்று சுதந்திர தின நாளன்றும் ஓயவில்லை. அதே பயணத்தை தொடர்ந்து சென்று தேசியக் கொடியை ஏற்றினார்.












Click it and Unblock the Notifications