தரையிறங்கும் நேரத்தில்.. திடீரென உதவி கோரிய பைலட்..திருவனந்தபுர விமான நிலையத்தில் பரபர
துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தரையிறங்கும் நேரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக பைலட் உதவி கோரியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் தரையிறங்கும் போது விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைலட் உதவி கோரியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் குறைந்த கட்டணத்துடன் விமான சேவை அளித்து வருகிறது. மத்திய கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு அதிக அளவில் இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு IX540 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை வருகை தந்தது. விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது விமானத்தில் சில கோளாறுகள் இருப்பதாக விமானி உணர்ந்தார். உடனடியாக இது குறித்து விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்த விமானி விமான கட்டுப்பாட்டு அமைப்பிடம் உதவியும் கோரினார். எனினும், அதிர்ஷ்டவசமாக எந்த சிக்கலும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

விமானி அவசர நிலை எதையும் அறிவிக்கவில்லை. காலை 6.30 மணிக்கு ஷெடூல்டு நேரப்படி விமானம் வழக்கம் போல் எந்த சிக்கலும் இன்றி தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில், விமானத்தின் முன்பக்கம் உள்ள டயரின் டாப் லேயர் கவர் மூடப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் அது நிறுத்தப்படும் இடத்திற்கு டோ செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர் என்று விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் திருவனந்தபுர விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications