கொலைகளால் அதிரும் கேரளா! எஸ்டிபிஐ பிரமுகர் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று மதியம் எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் 24 மணி நேரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு மாவட்டம் மேலமுரியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர்.
இந்த நிலையில், இன்று தனது கடையில் ஸ்ரீநிவாசன் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

20 முறைக்கும் மேல் விழுந்த வெட்டு
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீநிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் யார் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட அக்கம்பக்கத்தினர் 20 முறைக்கும் மேல் ஸ்ரீநிவாசன் வெட்டப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

தந்தை முன் கொல்லப்பட்ட SDPI பிரமுகர்
இதே பாலக்காட்டில் நேற்று SDPI கட்சியை சேர்ந்த ஜுபைர், வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி பைக்கிலிருந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஜுபைரை அவரது தந்தையின் கண்முன்பே சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கார்
ஜுபைரை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகள் குற்றம்சாட்டின.
ஆனால், குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை. ஆனால், கொலையாளி பயன்படுத்திய காரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் உள்ள எண்ணை வைத்து விசாரித்ததில் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சஞ்சித் என்பவருடைய கார் என்பது தெரியவந்தது. ஆனால், இதை சஞ்சித்தின் தந்தை மறுத்துள்ளார்.

தொடர் கொலைகள்
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் சஞ்சித் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலக்காட்டில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். ஜுபைர் கொல்லப்பட்டதை போன்றே அவர் மீது கார் மோதி, கீழே விழுந்தபின் அவரை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றது. அதன் பின்னர் 2021 டிசம்பர் 18 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
இதில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஷான் கொல்லப்பட்ட அடுத்த 12 மணி நேரத்தில் பாஜகவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் வெட்டிக்கொல்லப்பட்டார்.

24 மணி நேரத்தில் கொலை
இந்த நிலையில் நேற்று ஜுபைர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநிவாசன் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டு உள்ளது பழிவாங்கும் செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையின் பின்னணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications