Sabarimala: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு! கைதான உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் விசாரணை
திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடுபோன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெங்களூர் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, கவசங்களை ஒப்படைத்த போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்த போது அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.
அதாவது 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே 2019 ஆம் ஆண்டு சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சஸ்பெண்ட் செய்தது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் பேத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்வசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பேத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இதையடுத்து உன்னியை பத்தினம்திட்டா அழைத்து வந்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications