தலைநகரில் பிரதான எதிர்க்கட்சி.. பல இடங்களிலும் கூடுதல் சீட்.. கேரளாவில் கால் பதிக்கும் பாஜக!
திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்று மடங்கு அதிக வெற்றி பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டது, நடக்காவிட்டாலும் கூட தனது முத்திரையை பதித்துள்ளது அந்த கட்சி என்கிறது வெற்றிக்கான புள்ளிவிபரம். அதுமட்டுமல்ல, தலைநகரமான, திருவனந்தபுரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது பாஜக.
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஆளும் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்று அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான கட்டியம் கட்டியுள்ளது.
பாஜக இந்த முறை எப்படியாவது கேரளாவில் தடம் பதிக்க வேண்டும் என்று மிகவும் பிரயாசைப்பட்டது.
இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. அதிமுக செய்யத் தவறியதை.. கையில் எடுத்த கமல், ரஜினி, பாஜக.. !
பல வார்டுகளை வென்ற பாஜக
கடந்த முறை உள்ளாட்சி தேர்தல்களில் 1236 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. பஞ்சாயத்துகள் மாவட்ட பஞ்சாயத்து நகராட்சிகள் மாநகராட்சிகள் போன்ற அனைத்திலும் உள்ள வார்டுகளின் கணக்கு தான் இது. மொத்த வாக்குகளில் 14%வை பாஜக பெற்றது. இந்தமுறை 1800 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. கட்சி திட்டமிட்டது 2500 சீட்டுகளிலாவது வென்றுவிட வேண்டும் என்பதைத்தான்.
கவுரவமான தோல்வி
கடந்த முறையை விட இந்த முறை அதிக வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட ஏற்கனவே பதவி வகித்த 600 வார்டுகளை பாஜக இழந்துள்ளது என்பது பாஜகவுக்கு பாதகமான அம்சம். மற்ற புதிய இடங்களில் வெற்றி பெற்று இருப்பது சாதகமான அம்சம். எனவே இதை ஒரு கௌரவமான தோல்வி என்ற வகையில் எடுத்துக் கொண்டு இருக்கிறது பாஜக.
பிரதான எதிர்க்கட்சி
இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள 100 வார்டுகளில் 32 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. இதைவிட பெரிய வெற்றியை அந்த கட்சி எதிர்பார்த்து தொடர்ந்து உழைத்து வந்தது. இருப்பினும் இந்த வெற்றியே கூட பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு பாஜகவை கொண்டுவந்துள்ளது. ஏனெனில் கடந்த தேர்தலில், அதற்கு முந்தைய தேர்தலைவிட 29 வார்டுகளை அதிகம் பெற்று 35 வார்டுகளை வென்று எதிர்க்கட்சியாக விஸ்வரூபம் எடுத்திருந்தது பாஜக.
திருவனந்தபுரம்
இடதுசாரிகள் கைப்பற்றிய திருவனந்தபுரம் மாநகராட்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது காங்கிரஸ் கூட்டணி. திருவனந்தபுரத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிட்டால் வார்டுகளை இழந்துள்ளது பாஜக. பெரும்பாலும் இடதுசாரிகள் அந்த இடத்தில் வென்றுள்ளனர். காங்கிரசும் இடதுசாரிகளுக்கே ஓட்டு போட தொண்டர்களை நிர்பந்தித்ததுதான் இதற்கு காரணம் என கூறுகிறது பாஜக.
பாஜக வளர்ச்சி
தெற்கு கேரளாவில் பாஜக வளர்ச்சி பெற்று வருவதை இந்த தேர்தல் தெளிவாக காட்டுகிறது. இதில் ஈழவர்கள் மற்றும் நாயர்கள் ஆகிய சமுதாயத்தினரிடையே பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. திருவனந்தபுரம் மட்டுமல்லாது, பாலக்காடு நகராட்சியில் பாஜக பெற்ற வெற்றியும் இதைக்காட்டுகிறது. பந்தளம் நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது, அந்த கட்சிக்கு மற்றொரு நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிராமங்களில் பாஜக
2015ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது 14 கிராம பஞ்சாயத்துகளை பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில் தற்போது 22 கிராம பஞ்சாயத்துகளை அந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது. கிராமப்புறங்களிலும் பாஜக மெல்ல மெல்ல கால்பதிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இது, அந்த கட்சி தலைமையை சட்டசபை தேர்தலுக்கு மேலும் உத்வேகத்தோடு பணியாற்றுவதற்கான உந்து விசையை கொடுத்துள்ளது.