“அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேனா? ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது!” சுரேஷ் கோபி மறுப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் பாஜக எம்பியான சுரேஷ் கோபி மத்திய இணையமைச்சராக நேற்று பொறுப்பேற்றிருந்தார். ஆனால், தான் ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், நேற்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் கேரளாவின் பாஜக எம்பியான சுரேஷ் கோபியும் ஒருவர். இவர் மத்திய இணையமைச்சராக பதவியேற்றிருந்தார். ஆனால், தனக்கு அமைச்சராகும் எண்ணம் இல்லையென்று சுரேஷ் கோபி கூறியிருந்தார். அதாவது,
"மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம். சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன். அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால், பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. திருச்சூர் தொகுதி மக்களுக்காக ஒரு எம்.பியாக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறியிருந்தார்.
இது பெறும் விவாதங்களை கிளப்பியது. ஏனெனில் முதல் முறையாக கேரளாவிலிருந்து ஒரேயொரு எம்பி மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்ட நிலையில், சுரேஷ் கோபி அதனை வேண்டாம் என்ற கூறியது, பாஜகவை அக்கட்சியின் எம்பியே மதிக்கவில்லை என்று பேசப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தற்போது சுரேஷ் கோபி இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, "மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கீழ் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
கேரளாவில் முதல் முறை கால் பதித்த பாஜக: கேரளாவில் 1957 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல்களில் 2024க்கு முன்பு வரை பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் முதல் முறையாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்.
அதேபோல அவருக்கு மத்திய அமைச்சராவையிலும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. திருச்சூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளரை 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி தோற்கடித்திருக்கிறார். இந்த வெற்றி மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் காலூன்றியிருக்கிறது. இதற்கு பரிசாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications