"பாவம் அவரே கன்பியூஷன் ஆகிடாரு.." போர்ச்சுகல் கொடியை எஸ்டிபிஐ கொடி என நினைத்து கிழித்த பாஜக ஆதரவாளர்
திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கால்பந்து போட்டி விரைவில் தொடங்கும் நிலையில், கேரளாவில் ஒரு சுவாரஸிச சம்பவம் நடந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் உலகக் கோப்பை உற்சாகமாகத் தொடங்க உள்ளது.
மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து மீது ஒட்டுமொத்த உலகமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. முதல் போட்டியில் கத்தார் ஈக்வடார் அணிகள் மோதுகிறது.

புட்பால்
இந்திய அணி இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் இருக்கும் புட்பால் ரசிகர்கள் இந்த உலகக் கோப்பை மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாகக் கேரளாவில் வெறித்தனமான புட்பால் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் இப்போதில் இருந்தே புட்பால் உலகக் கோப்பை மீது ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்காகக் கேரளாவில் அவர்கள் கட்அவுட், போஸ்டர் எல்லாம் கூட வைத்து இருக்கிறார்கள்.

கேரளா
இதற்கிடையே உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னதாக, கேரளாவின் கண்ணூரில் உள்ள பானூர் பகுதியில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போர்ச்சுகல் நாட்டுக் கொடியைச் சாலையோரம் வைத்துள்ளனர். இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நள்ளிரவு நேரத்தில் ஒருவர் அந்த கொடியைக் கிழித்து போட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைதும் செய்து உள்ளனர்.

பாஜக ஆதரவாளர்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. போர்ச்சுகல் கொடியைக் கிழித்த அந்த நபர் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. எஸ்டிபிஐ அரசியல் கட்சியின் கொடி என்று தவறாக நினைத்து அந்த நபர், போர்ச்சுகல் நாட்டுக் கொடியைக் கிழித்துள்ளார். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பால் தொடங்கப்பட்டதாகும்.

போலீசார்
இச்சம்பவம் பானூரில் செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் போதையில் இந்த செயலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் மேலும் கூறுகையில், "அவர் பாஜகவின் தொண்டர் இல்லை. பாஜக ஆதரவாளர் மட்டுமே.. இதற்கு முன்பு அவர் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக போலீஸ் ஆவணங்களில் எதுவும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாமீன்
அர்ஜென்டினா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பிற நாடுகளின் கொடிகளையும் கூட அங்கு ரசிகர்கள் ஏற்றி இருந்தனர். இருப்பினும், அந்த நபர் போர்ச்சுகல் கொடியை மட்டுமே எஸ்டிபிஐ கொடி என்று நினைத்து கொடியைக் கீழே இறக்கிக் கிழித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், கொஞ்ச நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து பாஜக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.












Click it and Unblock the Notifications