புதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...! துணை ஆட்சியராக பதவியேற்பு
திருவனந்தபுரம்: இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பார்வையற்ற பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ்.தேர்ச்சி பெற்று கேரள மாநிலத்தில் துணை கலெக்டராக பதவியேற்றுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த பிரஞ்சால் பட்டில் தனது 6-வது வயதில் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். ஆனால், விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் அவர் இழக்கவில்லை. முடியும் என்ற ஒற்றை மந்திரத்தோடு தொடர்ந்து கல்வியில் நாட்டம் செலுத்தி இன்று துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொலிடிக்கல் சயின்ஸ் பயின்ற அவர், சர்வதேச உறவுகள் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். பார்வையில்லை என்பதற்காக தன் மீது யாரும் பரிவு காட்டுவதை விரும்பாத அவர், பார்வையிழப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஐ.ஏ.எஸ்.ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்து அவர் பின்வாங்கவே இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதி தேசிய அளவில் 124-வது இடத்தில் தேர்ச்சிபெற்றார். பின்னர் முசோரியில் நிர்வாகம் தொடர்பான பயிற்சியை முடித்த பிரஞ்சால் பட்டிலுக்கு, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணி வழங்கப்பட்டது. அதை செவ்வனே எந்தக் குறையுமின்றி செய்ததால் இப்போது துணை ஆட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்ட துணை ஆட்சியராக இன்று காலை பதவியேற்றுக்கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வாழ்த்துக்கூறி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications