"ரொம்ப டேன்ஞர்!" ஸ்கூல்ல கூட பையணும் பொண்ணும் ஒன்னா உட்கார கூடாது.! கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பு
திருவனந்தபுரம்: பள்ளியில் மாணவ - மாணவிகள் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்வது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவர் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாகச் சிறார்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து உள்ளது.
இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் பாலியல் சம்பவங்களுக்குப் பெண்களைக் குறை சொல்லும் போக்கும் அதிகரித்து வருகிறது.
சர்ச்சை
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் பையனும் பொண்ணும் ஒன்றாக அமர்வதே ஆபத்தானது என்று ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் இன்-சார்ஜ் பிஎம்ஏ சலாம் என்பவர் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். அதாவது பள்ளி வகுப்பறைகளில் சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒன்றாக உட்கார அனுமதிப்பது ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவசியம் என்ன?
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகப் பாலின சமத்துவ கல்வியை அறிமுகப்படுத்தக் கேரள கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சலாம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கேரள அரசின் செயல்பாடுகள் ஆபத்தானது. வகுப்பறைகளில் சிறுமிகளும் சிறுவர்களும் ஒன்றாக உட்கார வேண்டிய அவசியம் என்ன?
ரொம்ப டேன்ஞர்
ஏன் அவர்களை வற்புறுத்துகிறீர்கள்? ஏன் அசம்பாவிதம் நடக்கத் தேவையில்லாத வாய்ப்புகளை உருவாக்குகிறீர்கள்? இதெல்லாம் ரொம்ப டேன்ஞர்.. இவை சிக்கலை மட்டுமே ஏற்படுத்தும்.இதனால் இடைநிற்றல் சிக்கல் கூட ஏற்படும் ஆபத்து உள்ளது. பாலின நடுநிலைமை என்பது மதப் பிரச்சினை அல்ல, தார்மீக பிரச்சினை. பாலின சமத்துவ சீருடைகளை மாணவர்கள் மீது திணிக்க அரசு முயல்கிறது.
பாலின சமத்துவமா?
பாலின சமத்துவம் மாணவர்களைத் தவறாக வழிநடத்தும். இதைத் திரும்பப் பெறுமாறு அரசை நாங்கள் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார். கேரள அரசின் பாலின சமத்துவ கல்வி முறைக்கு அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டால், பெண் பிள்ளைகள் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறினர்.
பெண்கள்
பாலியல் தொல்லை சம்பவங்களில் பெண்களைக் குறை சொல்லும் போக்கும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் பாலியல் தொல்லை தொடர்பான விசாரித்த கேரளா நீதிமன்றம், பெண் பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் வகையிலான ஆடைகளை அணிந்து இருக்கும் போது, சட்டப்பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு) பொருந்தாது" என்று கூறி சர்ச்சை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.