எங்க கொண்டுவந்து விட்டிருக்கு பார்த்தியா! கூகுள் மேப்பை நம்பி ஆற்றில் கவிழ்ந்த வாகனம்..2 பேர் பலி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றவர் சாலை என நினைத்து ஆற்றில் காரை விட்டுள்ளார். இந்த விபத்தில் நீரில் மூழ்கி இரண்டு மருத்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் அத்வைது (வயது 28), அஜ்மல் (28) மற்றும் அவர்களது நண்பர்கள் மூன்று பேர் என ஐந்து பேரும் ஒரு காரில் கொச்சிக்கு சென்றுள்ளனர். கொச்சியில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்ற இவர்கள் ஐந்து பேரும் திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

கொச்சியில் இருந்து எர்ணாகுளம் வரும் ரூட்டில் இவர்களுக்கு பாதையில் குழப்பம் ஏற்படவே கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்துள்ளனர். இரவு நேரம் என்பதாலும் மழை வேறு பெய்ததாலும் சாலை கூட சரியாக தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் காரில் தானே போகிறோம் என்று நினைத்து இரவே திரும்ப முடிவு செய்து சென்று கொண்டிருந்துள்ளனர்.
செல்லும் வழியில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீரும் தேங்கி நின்றுள்ளது. கொச்சி அருகே உள்ள கொடுங்காடு என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அதாவது நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்கள் தவறான பாதையில் சென்றதாக கூறப்படுகிறது. சாலையில் தெரு விளக்குகளும் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது ஆறு இருப்பதை கவனிக்காமல் சாலையில் தண்ணீர்தான் தேங்கி நிற்கிறது என நினைத்து காரை டிரைவர் தொடர்ந்து ஓட்டியுள்ளார்.
இதனால் கார் ஆற்றில் மூழ்கியுள்ளது. காரில் இருந்த 5 பேரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் இதை எதேச்சையாக இந்த விபத்தை பார்த்ததும் போலீசாருக்கும் தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், நீர் மூழ்கி வீரர்களை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவர்களான அத்வைது மற்றும் அஜ்மல் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் பின்பகுதியில் இருந்த மூன்று பேரை கார் கதவு திறக்க முடிந்ததால் அவர்கள் தப்பித்ததாகவும் முன்பகுதியில் கார் கதவு முழுமையாக மூடி இருந்ததால் முன் வரிசையில் அமர்ந்து இருந்த டாக்டர் அத்வைது மற்றும் டாக்டர் அஜ்மல் ஆகிய இருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
மீட்கப்பட்ட மூன்று பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூகுள் மேப் பார்த்து காரின் ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளதாகவும் இதனால், வழி மாறி சென்று இருக்கலாம் எனவும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications