ஆமாம்.. இரு பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மை.. கேரள முதல்வர் தகவல்
திருவனந்தபுரம்: சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மைதான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்பட தெரிவித்தார்.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனைத்து வயதுடைய பெண்களையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
சபரிமலை கோயிலுக்குள் இன்று அதிகாலை இரு பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
சுமார் 3.45 மணியளவில் அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.
இரு பெண்களும் சுவாமி தரிசனம் செய்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்தார். மேலும் அவர்களுக்கு போலீஸார் முழு பாதுகாப்பு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.