அமித் ஷாவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்! பக்கத்திலேயே 2 பேருக்கும் இருக்கைகள்! என்ன பேசினார்கள்?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் மாநில கவுன்சில் கூட்டத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கூடை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் அமித்ஷாவுக்கு அருகிலேயே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றும் அவருக்கு அமித்ஷா அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அமித்ஷா முன்னிலையிலேயே அதுவும் அவர் அருகில் அமர்ந்து கொண்டே தமிழக உரிமை சார்ந்த விவகாரங்கள் பற்றி முதல்வர் பேசியது தான் இதில் ஹைலைட்.
மின் கட்டணத்தை கூட்டுங்க! கறாராக சொன்ன மத்திய அரசு! டெல்லியில் என்ன நடந்தது? செந்தில் பாலாஜி பளீர்
தென் மாநிலங்கள்
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு,கேரளா, ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் ஆண்டுக்கு ஒரு முறை தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தின் பிரச்சனைகள், தேவைகள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிப்பார்கள்.
முதலமைச்சர் பங்கேற்பு
இந்த மாநாட்டில் தென் மாநில அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதில் பங்கேற்க செல்லாதது குறிப்பிடத்தக்கது. தனக்கு பதில் அமைச்சர் பொன்முடியை அந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதனிடையே இந்தாண்டு தாமே நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
ஸ்டாலின் வரவேற்பு
அமித் ஷாவுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கூடை வழங்கிய ஸ்டாலின், அவருக்கு அருகில் ஒதுக்கப்பட்ட இருக்கையிலேயே பக்கத்தில் அமர்ந்தார். பரஸ்பர நலம் விசாரித்த இவர்கள், கூட்டம் தொடங்கிய பின்னர் அலுவல் சார்ந்த நடைமுறைகளை மட்டும் பின்பற்றினர். ஒரு பக்கம் பினராயி மற்றொரு பக்கம் ஸ்டாலின் என இருவரையும் தனது பக்கத்தில் அமர வைத்து நடு நாயகமாக அமர்ந்திருந்தார் அமித் ஷா.
பாஜக முதல்வர்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றும் அவருக்கு அமித்ஷா அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது கவனிக்கத்தக்கது.