பிபிசி ஆவணப்படத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ்.. கேரளாவில் பொதுமக்களுக்கு திரையிடல்! சர்ச்சை
பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள குஜராத் பிபிசி ஆவணப்படத்தை இன்று மாலை கேரளா காங்கிரஸ் திரையிடுகிறது.
திருவனந்தபுரம்: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ள நிலையில், இந்த ஆவணப்படத்தைக் காங்கிரஸ் கட்சி திருவனந்தபுரத்தில் மக்களுக்கு ஒளிபரப்ப உள்ளது.
கடந்த 2002இல் குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஒன்று நடந்தது. இது தொடர்பாக பிபிசி இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது.
இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இணையத்தில் இந்த ஆவணப்படம் குறித்த அனைத்து லிங்குகளும் நீக்கப்பட்டது. இந்தச் சூழலில் சமீபத்தில் தான் இந்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
குஜராத் கலவர பிபிசி ஆவணப்படம்: பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே மோடிக்கு ஆதரவாக முழங்கிய ரிஷி சுனக்!
ஆவணப்படம்
இந்த ஆவணப்படம் பிரசார நோக்கில் உள்ளதாகவும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி மத்திய அரசு ஏற்கனவே இந்த ஆவணப்படத்திற்குத் தடை விதித்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி ஜேஎன்யுவில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டனர். அப்போது அங்கு திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதையும் தாண்டி மாணவர்கள் தங்கள் மொபைலில் ஒன்றாக அமர்ந்து ஆவணப்படத்தைப் பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் எறியும் சம்பவங்களிலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
திரையிடல்
இதேபோல வேறு சில கல்லூரிகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே இந்த ஆவணப்படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தைக் கேரளாவில் உள்ள காங்கிரஸ் யூனிட் திருவனந்தபுரத்தில் இன்று திரையிடவுள்ளது.. இந்தியா முழுக்க பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு இந்த ஆவணப்படத்தைத் தடை செய்தது பேச்சுரிமைக்கு எதிரானது என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறது.
கேரள காங்கிரஸ்
அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் இந்த ஆவணப்படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவில் இந்த ஆவணப்படம் பெரிய சர்ச்சையையே கிளப்பியுள்ளது. சமீபத்தில் கேரள காங்கிரஸின் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் கே. ஆண்டனி, காங்கிரஸின் நிலைப்பாட்டை மீறி, பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.
எதிர்ப்பு
இருப்பினும் அனில் ஆண்டனியின் கருத்துக்குக் கேரள காங்கிரஸ் தலைவர்களே கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அவரது கருத்து முதிர்ச்சியற்று இருப்பதாகத் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நமது நாட்டின் இறையாண்மையை அவ்வளவு எளிதில் யாராலும் பாதிக்க முடியாது... வெளிநாட்டு ஆவணப்படம் திரையிடப்பட்டால் பாதிக்கப்படுமா?.... நமது தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஒரு ஆவணப்படத்தால் பாதிக்கப்படும் அளவுக்குப் பலவீனமாகவா உள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி கருத்து
ஏற்கனவே டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சண்டிகரில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட நிலையில், இப்போது திருவனந்தபுரத்திலும் இந்த ஆவணப்படத்தைத் திரையிடும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. முன்னதாக இது குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தி கூறுகையில், "உண்மை இப்போது பிரகாசமாகத் தெரிகிறது. எந்த ஒரு தடையும் அடக்குமுறையும் மக்களைப் பயமுறுத்தினாலும் கூட அது உண்மை வெளிவருவதைத் தடுக்காது" என்று அவர் தெரிவித்துள்ளார்.