இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விசாரணையே இல்லாமல் சுட்டு தள்ள வேண்டும்! காங்கிரஸ் எம்பி சர்ச்சை பேச்சு
திருவனந்தபுரம்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை தொடரும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேல் நாட்டிற்குள் வந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன.

அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இப்போது மெல்ல முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல்: அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே காசாவில் இருக்கும் மருத்துவமனைகள் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், ஹமாஸ் படை காசா மருத்துவமனைகளுக்குக் கீழே சுரங்கப் பாதைகளை அமைத்து அதன் கட்டுப்பாட்டு மையங்களை இயக்கி வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாகவே தாங்கள் காசாவில் இருக்கும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. மேலும், காசா மருத்துவமனைகளில் எடுக்கப்படும் வீடியோக்களையும் இஸ்ரேல் வெளியிட்டு வருகிறது. அதில் காசா நகரில் இருக்கும் மருத்துவமனைகளில் கீழே பல அதிநவீன ஆயுதங்கள், வெடிமருந்துகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரஸ் எம்பி: இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடரும் நிலையில், கேரளாவின் காசர்கோட்டில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு நிகழ்வில் பேசிய காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னிதன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி என்று விமர்சித்தார். மேலும், அவரை விசாரணை இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் சமரியாக விசாரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் விசாரணை இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுபோன்ற ஒன்றை நடத்தப்பட வேண்டிய நேரம் இது. பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றவாளியாக இப்போது நிற்கிறார். நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டிய நேரம் இது, ஏனென்றால் அந்தளவுக்கு அவர் கொடுமையை செய்கிறார்" என்றார்.
சர்ச்சை பேச்சு: பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் போர் விதிகளுக்குப் புறம்பானது என்று குறிப்பிட்ட அவர், ஜெனிவா உடன்படிக்கையை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சாடினார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த சண்டை முடிவுக்கு வர வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்தியா அதிகாரப்பூர்வமாக நெதன்யாகுவை நேரடியாக எந்த இடத்திலும் விமர்சித்தது இல்லை. இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் என்பது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பாக உலக நாடுகள் வலியுறுத்தும் போதிலும், ஹமாஸை முழுமையாக அழிப்பதே தங்கள் நோக்கம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications