கேரளா கோவிலில் ‘கோழி கறி’யே பிரசாதம்.. எடியூரப்பாதான் தீவிர பக்தர்.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
திருவனந்தபுரம்: நவராத்திரி மாதங்களில் அசைவ உணவை சாப்பிடுகிறார்களே என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை பிரதமர் மோடி விமர்சித்த விவகாரம் ஓயாத அலைகளாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இறைச்சி சாப்பிடும் வீடியோவை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இருவரையும் முகலாயர்களுடன் ஒப்பிட்டும் விமர்சித்தார் பிரதமர் மோடி.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த நாட்டில் யாரும் எதையும் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் தடுக்கவில்லை. முகலாயர்கள் இந்த நாட்டின் கோவில்களை இடிக்கும் வரை இவர்களுக்கு நிம்மதியும் திருப்தியும் ஏற்படவே இல்லை. நவராத்திரி மாதத்தில் அசைவ உணவை உண்ணுகின்றனர். இந்த வீடியோக்களை வெளியிடுகின்றனர். புனிதமான மாதங்களில் அசைவ உணவை சாப்பிட்டு யாருடைய உணர்வுகளை இவர்கள் காயப்படுத்த நினைக்கிறார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

பிரதமர் மோடிக்கு தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி தருகின்றனர். கேரளாவில் மலபார் தேவசம் போர்டுக்கு கட்டுப்பட்ட திருவேற்காடு பகவதி கோவில் எனப்படுகிற மடாயி காவு கோவில் 'கோழிக் கறிதான்' பிரசாதமாகவே எப்போதும் வழங்கப்படுகிறது என்பதையும் மோடிக்கான பதிலடியாக காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கேரளாவின் காளி கோவில்களுக்கு மூல கோவிலாக வணங்கப்படுவது மடாயி காவு கோவில். சிரசக்கல் அரச குடும்பத்தினரின் புனித கோவிலாக இருந்து வருகிறது. பிராமணர்களை அர்ச்சகர்களாகக் கொண்ட இந்த கோவிலில் முன்னர் கால்நடைகளை பலியிடுதல் வழக்கமாக இருந்தது. இது சட்டப்படி தடை செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு கோழியை பலியிட்டு வருகின்றனர். அத்துடன் மடாயி காவு கோவிலில் பிரசாதமே கோழிக் கறிதான். இந்த கோவிலுக்கும் மேற்கு வங்க பிராமணர்களுக்கும் பூர்வீக தொடர்பு இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நவராத்திரி கொண்டாடும் மேற்கு வங்க மக்கள் துர்கை அம்மனுக்கு மீன்களை படையிலடுவதும் பண்பாடுதான் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

அத்துடன் கேரளாவின் மடாயி காவு கோவிலின் தீவிர பக்தர்களாகவும் இருப்பவர்கள் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள்தான் எனவும் சுட்டிக்காட்டுக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இந்த கோவிலின் அன்னதான கூடத்துக்கு நன்கொடை கொடுத்தவரும் எடியூரப்பாதான். 2016-ல் இந்த அன்னதானக் கூடத்தை திறந்து வைத்தவரும் எடியூரப்பாதான். வட கர்நாடகாவில் உள்ள இக்கோவிலுக்கு ஏராளமான கன்னடர்களும் பக்தர்களாக வருகை தருகின்றனர். தற்போது புனித மாதங்களில் அசைவம் சாப்பிடுவதை விமர்சிக்கும் மோடி, ஒருமுறையாவது மடாயி காவு கோவிலுக்கு வர வேண்டும் என்றார் இடதுசாரித் தலைவர் சீதாராம் யெச்சூரி.












Click it and Unblock the Notifications