மார்ச் 19.. ஒரு பொய்.. கேரளாவில் சின்ன மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய கதை!
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் 243 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. கேரளாவில் 234 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. நாடு முழுக்க 1365 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கேரளாவில் காசர்கோடு மற்றும் கன்னூர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காசர்கோட்டில் அதிக அளவில் கொரோனா பரவ என்ன காரணம் என்று விளக்கப்பட்டுள்ளது.

யார் காரணம்?
கேரளாவில் காசர்கோட்டில் கொரோனா பரவ காரணமாக கேரளாவை சேர்ந்த ஒரு கடத்தல் மன்னனை அம்மாநில மக்கள் கைகாட்டுகிறார்கள். கேரளாவில் கொரோனாவிற்கு எதிராக அம்மாநில அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதில் கடந்த மார்ச் 19ம் தேதி வரை அங்கு கொரோனாவிற்கு எதிராக வெற்றிகரமாக அம்மாநில அரசு செயல்பட்டது. ஆனால் மார்ச் 19ம் தேதிதான் கேரள அரசை உலுக்கிய அந்த சம்பவம் நடைபெற்றது.

தங்க கடத்தல்
மார்ச் 19ம் தேதி கோழிக்கோட்டில் துபாயில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் கேரளாவை சேர்ந்த பிரபல தங்க கடத்தல் ஆசாமி. கேரளாவில் இருக்கும் நகை கடைகள் சிலவற்றிற்கும் இவர் ரகசியமாக தங்கம் கடத்தி கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு பெரிய அளவில் அரசியல் பின்புலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியானது
மார்ச் 11ம் தேதி கோழிக்கோடு வந்த இவருக்கு மார்ச் 19ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த 8 நாட்கள் இவர் காசர்கோட்டில்தான் இருந்துள்ளார். இதுவரை எல்லாம் நன்றாக போய்கொண்டு இருந்தது. ஆனால் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின் நிலைமை மாறியது. அவருக்கு கொரோனா உறுதியான பின் அவர் யாரிடம் எல்லாம் தொடர்பு கொண்டார் என்று விசாரிக்கப்பட்டது. ஆனால் இவர் பல உண்மைகளை மறைத்தார்.

உண்மைகளை மறைத்தார்
தான் எத்தனை பேரை சந்தித்தேன். எத்தனை பேர் உடன் பேசினேன் என்பதை அப்படியே மறைத்து இருக்கிறார். இவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று கூறினால் பெரிய அளவில் கடத்தல் கும்பல்கள் மாட்டும். இவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகள் தெரிய வரும். அதேபோல், இவர் நகை கடைகள் உடன் வைத்து இருக்கும் தொடர்புகள் வெளியே வரும். பல முக்கிய புள்ளிகள் இதனால் மாட்டுவார்கள்.

பொய்
இதனால் பல உண்மைகளை மறைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார். ஆகவே இவர் தொடர்பு கொண்ட நபர்களை கேரளா அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இவர் மூலம் வேறு சிலருக்கு கொரோனா பரவி உள்ளது. அவர்கள் மூலம் இன்னும் சிலருக்கு சங்கிலி தொடர் போல கொரோனா பரவி உள்ளது. இவர் உண்மைகளை சொல்லாததால் கொரோனா பரவலை காசர்கோட்டில் தடுக்க முடியவில்லை.

ஒரே காரணம்
அதாவது இவரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவியது என்பதை கண்டுபிடித்தால்தான் காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம், கொரோனா யாருக்கு எல்லாம் பரவி இருக்கலாம் என்று கணிக்க முடியும். ஆனால் இவர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருவதால் அங்கு கொரோனா உண்டாக வாய்ப்பு உள்ள நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்தான் தற்போது கேரளாவில் காசர்கோட்டில் 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பலருக்கு பரப்பினார்
இவர் காசர்கோடு வந்து சுற்றிய ஒரு வாரத்தில் பலருக்கு கொரோனாவை பரப்பி உள்ளார். இதில் 27 பேர் அந்த கடத்தல் ஆசாமியை நேரில் சந்தித்த நபர்கள். இவர்கள் எல்லோரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனால் தற்போது காசர்கோடு மாவட்டத்தில் மொத்தமாக எல்லா கிராமங்களையும் மூடி உள்ளனர். மக்கள் வீட்டை விட்டு ஒரு நொடி கூட வெளியே வர கூடாது என்று கூறப்பட்டுள்ளது. காசர்கோட்டிற்கு அருகே உள்ள கண்ணூரிலும் 44 பேருக்கு கொரோனா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications