இதெல்லாம் ரொம்ப ஓவர்! பொல்யூஷன் சர்டிபிகேட் இல்லைனு மின்சார ஸ்கூட்டருக்கு அபராதம்! மிரண்ட உரிமையாளர்
திருவனந்தபுரம்: கேரளாவில் எலக்டிரிக் ஸ்கூட்டர் ஒன்றுக்கு வித்தியாசமான முறையில் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவருக்கும் தெரியும். இது நமது உயிரைக் காக்கும் என்பதால் பெரும்பாலானோர் இதைப் பின்பற்றுகின்றனர்.
அதேபோல ஆர்சி புக், இன்சூரன்ஸ் என சில ஆவணங்களையும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். மாசு வெளியேறுவதை உறுதி செய்யும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழும் அவசியமாகும்.

டூ விலர்
இதன் அடுத்த கட்டமாக சுற்றுச்சூழல் மாசையே ஏற்படுத்தாத வகையில் மின்சார வாகனங்களும் விற்பனையில் உள்ளன. அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு உள்ள ரசிகர்களின் பட்டாளம் அனைவருக்குமே தெரியும். இந்தியாவில் மின்சார கார்களை காட்டிலும் மின்சார இரு சக்கர வாகனங்களின் சந்தை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலையைக் கண்டு அஞ்சியே பொதுமக்கள் மின்சார டூ வீலர் வாகனங்கள் பக்கம் செல்கின்றனர்.

கேரளா
இந்தச் சூழலில் மின்சார டூ வீலர் வாகன உரிமையாளர் ஒருவருக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொல்யூஷன் சர்டிபிகேட் எனப்படும் இந்த மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், எலக்டிரிக் ஸ்கூட்டர்களுக்கு பொல்யூஷன் சர்டிபிகேட் இல்லை என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் பேசுபொருள் ஆகியுள்ளது.

பொல்யூஷன் சர்டிபிகேட்
இந்தச் சம்பவம் நமது அண்டை மாநிலமான கேரளாவில் தான் அரங்கேறி உள்ளது. போலீசார் அளித்துள்ள இந்த இ-சலான் போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலஞ்சேரியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதில் மோட்டார் வாகன சட்டப்படி பொல்யூஷன் சர்டிபிகேட்டை காட்டாததால் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டு உள்ளது.

வினோதம்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இப்படித் தான் கொச்சியைச் சேர்ந்த ஒருவர், போதிய பெட்ரோல் இல்லாமல் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்படுவதாகச் சலான் அனுப்பப்பட்டது. அதாவது போதிய எரிபொருள் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அதன் பின்னரே அது தட்டச்சு பிழை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகச் சலான் பெற்ற அந்த நபரே விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications