கனவில் கூட நடக்காத சம்பவம்.. ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற கேரள கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இடுக்கி அருகே ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த என்ஜினியரிங் மாணவி யானை தள்ளிவிட்டு மரக்கிளை விழுந்து உயிரிழந்தார். அவரது ஆண் நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மரணம் இப்படி கூட ஏற்படுமா? என்று நினைக்க தோன்றும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். காட்டு யானைகள் முட்டி தள்ளிய மரம் மாணவி மீது விழுந்து இருக்கிறது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நினைக்கும் வகையில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிக்கோடு என்ற பகுதி உள்ளது. அங்குள்ள புதுச்சேரி மேற்கு பகுதியை சேர்ந்த வில்சன் என்பவரின் மகள் ஆன்மேரி. 21 வயதான ஆன்மேரி அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். பல்லாரிமங்கலம் பஞ்சாயத்து, அடிவாடு அருகே முல்லசேரி பகுதியை சேர்ந்தவர் அல்தாப் அபூபக்கர் (22) என்பவரும் அன்மேரியும் ஒன்றாக படித்து வருகிறார்கள்.
நண்பர்களான இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த நாளன்று பைக்கில் சென்று இருக்கிறார்கள். இடுக்கி சென்று விட்டு இருவரும் ஒரே பைக்கில் பாலக்காட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அல்தாப் அபூபக்கர் பைக்கை ஓட்ட அன்மேரி பின்னால் இருந்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சாலை என்பதால் இருபக்கமும் மரங்கள் மற்றும் மேகக்கூட்டங்களை ரசித்தபடி இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு காட்டு யானைகள் பனைமரத்தில் நுங்குகள் காய்த்து தொங்குவதை கவனித்தன. பனைமரத்தை சாய்த்து நுங்குகளை சாப்பிட நினைத்த யானைகள், பனைமரத்தை வேரோடு சாய்க்க முயற்சித்துள்ளன. ஆனால், பனைமரம் என்பதால் அவ்வளவு எளிதாக யானையால் சாய்க்க முடியவில்லை. இருந்தாலும் விடாத காட்டு யானைகள், துதிக்கையை கொண்டு முழு பலத்துடன் பனைமரத்தை முட்டியுள்ளன.
இதில் பனைமரம் இரண்டாக உடைந்து விழுந்தது. முறிந்த பனைமரம் அதன் அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த மரத்தின் கிளை முறிந்து கோதமங்கலம் அருகே நேரிமங்கலம் - இடுக்கி சாலையின் மீது விழுந்தது. அப்போது அன்மேரியும் அவரது நண்பரும் இந்த பைக் சரியாக அந்த இடத்தை கிராஸ் செய்தது. கண் இமைக்கும் நேரத்தில் மரம், பைக்கின் மீது விழுந்தது.
இதில், அன்மேரி படுகாயம் அடைந்தார். தலைப்பகுதி உடைந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார் அன்மேரி. அல்தாப் அபூபக்கர் நிலைத் தடுமாறி ஏறத்தாழ 100 அடி ஆழம் உள்ள சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தார். இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றக்கோரி அழுகுரல் எழுப்பியுள்ளனர். இதனை கேட்டு வனப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, இருவரையும் மீட்டனர். இருவரும் மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அன்மேரி பரிதாபமாக உயிரிழந்தார். அல்தாப் அபூபக்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனிதனாக பிறந்தால் மரணம் ஏற்படும் என்பது இயற்கையின் விதிதான். ஆனால், இப்படியெல்லாம் கூட மரணம் ஏற்படுமா? என பார்ப்பவர்களை கலங்கடிக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications