கேரள லாட்டரி: கடைசி வரை விடாத அதிர்ஷ்டம்.. அலட்சியமாக இருந்த விவசாயிக்கு கூரையை பிய்த்து கொட்டிய யோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் விவசாயி ஒருவருக்கு லாட்டரியில் (Kerala Lottery Ticket) ரூ.1 கோடியே 55 ஆயிரம் பரிசு விழுந்துள்ளது. உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்லும் போது எதேச்சையாக வாங்கிய டிக்கெட்டுக்கு முதல் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் விழுந்துள்ளன. ஆனால் பரிசு தனக்கு விழுந்துள்ளது என்று தெரியாமல் இருந்துள்ளார் அந்த விவசாயி. அப்போது தான் லாட்டரி ஏஜென்சி கடைக்காரர் அவரை தேடி சென்று பரிசு விழுந்த தகவலை சொல்லியிருக்கிறார். இதனால் அந்த விவசாயி தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளார்.
கேரளாவில் தினம் தோறும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. அங்கு தினசரி நடைபெறும் டிக்கெட் குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ 50 ஆகும். கேரளாவில் டீக்கடை இருக்கிறதோ? இல்லையோ? லாட்டரி கடை இல்லாமல் இருக்காது என நினைக்கும் அளவிற்கு திரும்பும் திசையெல்லம் லாட்டரி கடைகளே கண்ணில் படும்.

கேரள லாட்டரி டிக்கெட்
அந்த அளவுக்கு அங்கு லாட்டரிகள் பிரபலம். வாழ்நாளில் நமக்கும் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரள லாட்டரி பிரியர்கள் பலரும் டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. வாழ்நாள் முழுக்க டிக்கெட் வாங்கி ஒருமுறை கூட பரிசு அடிக்காமல் போன நபர்களே அதிகம் என்று கேரள சேட்டன்கள் முனுமுனுத்தாலும் ஆசை யாரை விட்டது என்பது போல, இன்னொரு பக்கம் லாட்டரியை வாங்கி வைப்பதை பார்க்க முடிகிறது.
இப்படி வாங்கும் லாட்டரிகளில் சிலருக்கு வாழ்நாள் செட்டில் போல, ஒரே நாளில் வாழ்க்கையே மாறிவிடுகிறது. நமக்கெல்லாம் எங்கே பரிசு அடிக்க போகிறது என்ற விரக்தியில் டிக்கெட்டை குப்பையில் வீசிவிட்டு பிறகு பரிசு விழுந்தது தெரிந்தால் மொத்த குப்பைத்தொட்டிகளையும் சல்லடை போட்ட சுவாரசிய நிகழ்வுகளும் அவ்வப்போது அங்கு நடைபெறுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.
ஆஸ்பத்திரிக்கு போகும் போது வாங்கிய டிக்கெட்
கேரளாவில் விவசாயி ஒருவர் தான் வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசு அடித்தது தெரியாமல் இருக்க லாட்டரி கடை ஊழியரே அவரை தேடிப்பிடித்து பரிசு விழுந்த தகவலை தெரிவித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செருபுழா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயியான இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை லேசான உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இவர் மருந்து, மாத்திரைகளை வாங்கிவிட்டு அருகில் இருந்த ஒரு லாட்டரி கடையில் லாட்டரி டிக்கெட்டுகளையும் வாங்கினார். ஒரு செட் டிக்கெட்டை அப்படியே வாங்கியுள்ளார்.
தேடிச் சென்று கொடுத்த லாட்டரி கடைக்காரர்
அவர் வாங்கியது சம்ருதி லாட்டரி டிக்கெட் ஆகும். ராஜ்குமார் வாங்கிய நாளிலேயே டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. நமக்கெல்லாம் எங்கே பெரிய பரிசு விழும் என்று நினைத்த ராஜ்குமார் டிக்கெட்டின் கடைசி 4 எண்களை மட்டும் பார்த்துவிட்டு பரிசு விழவில்லை என இருந்துள்ளார்.
அதே நேரத்தில் தங்கள் கடையில் விற்ற டிக்கெட்டிற்கு பரிசு விழுந்ததை அறிந்த லாட்டரி கடை ஊழியர்கள் டிக்கெட் வாங்கியவரை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். ஆனால், அவர் வராததால் டிக்கெட்டை வாங்கியது யார் என்று சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளனர். அப்போது விவசாயி ராஜ்குமார் வாங்கிய செட் டிக்கெட்டிற்கு பரிசு விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை தேடிப்படித்த லாட்டரி கடை ஊழியர்கள், பரிசு விழுந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
1.55 கோடிக்கு சொந்தக்காரர் ஆன விவசாயி
இதனால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன ராஜ்குமார்.. ஓடிச்சென்று அருகில் உள்ள வங்கி கிளையில் டிக்கெட்டை டெபாசிட் செய்து பரிசுத்தொகையை உரிமை கோரியுள்ளார். ராஜ்குமார் செட் டிக்கெட் (12 டிக்கெட்) ஒரே எண் கொண்ட டிக்கெட்டுகளை வாங்கியதால் அவருக்கு முதல் பரிசு மட்டும் இன்றி ஆறுதல் பரிசும் அவருக்கே கிடைக்கும்.
அதாவது மொத்தம் 1.55 கோடி பரிசாக கிடைக்க உள்ளது. ஏற்கனவே லாட்டரியில் ரூ.2 லட்சம் பரிசாக வென்றுள்ள ராஜ்குமாருக்கு முதல் பரிசு அடிப்பது இதுவே முதல் முறையாகும். நல்ல வேளையாக கடைக்காரர்கள் மட்டும் பார்த்து சொல்லாவிட்டார்கள்.. இல்லையென்றால் என்ன ஆகும் என நினைத்த ராஜ்குமார் கடை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாராம்.












Click it and Unblock the Notifications