நாட்டிலேயே முதன்முறையாக.. நடமாடும் இ - சேவை கேந்திரா.. அடேங்கப்பா, இத்தனை பயன்களா? அசத்துதே கேரளா
திருவனந்தபுரம்: நடமாடும் இ - சேவை கேந்திரா என்ற சேவை மையம், நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் துவக்கப்பட்டுள்ளது. இதன் சேவைகள் என்னென்ன தெரியுமா?
நீதிமன்ற சேவைகள் அனைத்து மக்களுக்குமே சென்று சேர வேண்டும், அதிலும் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து உயர்நீதிமன்றங்கள், மாநிலத்தில் ஏதாவது ஒரு மாவட்ட நீதிமன்றம் ஆகிய இடங்களில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இ - சேவை: அந்தவகையில், நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே, நடமாடும் இ - சேவை கேந்திரா என்ற சேவை மையம், முதன்முறையாக கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது. இது முழு கணினி வசதிகளுடன் இயங்கக்கூடியதாகும்.
மொபைல் கோர்ட் என்ற நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.. ஆனாலும், நீதிமன்றம் தொடர்பான அனைத்து உதவி மற்றும் சேவைகளை ஓரிடத்தில் பெறும் வகையில், இடுக்கி மாவட்டத்தில் இந்த நடமாடும் இ - சேவை கேந்திரா வாகனத்தின் பயன்பாடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது..
பயன்பாடுகள்: கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் முன்னிலையில், நீதிபதி ஏ.முஹமது முஸ்தக் இந்த சேவையை துவக்கி வைத்தார். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நடமாடும் மினி பஸ்சில், இணையதள வசதிகளுடன் 2 கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்டர் மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
தொழில்நுட்பம் குறித்து அறிமுகம் இல்லாதவர்களும், நீதித்துறையை அணுகும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.. இது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று தன்னுடைய சேவையை வழங்க போகிறது.. அந்தவகையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தில் அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடமாடும் இ - சேவா கேந்திரா துவங்கப்பட்டிருக்கிறது.
சேவைகள்: இந்த நடமாடும் இ - சேவை மையத்தினை, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.. இதன் சேவைகள் என்னென்ன தெரியுமா? சிறையில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க, முன்பதிவு மனுவை தாக்கல் செய்தல், மாவட்ட சேவை ஆணையம், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற சட்ட சேவைக் குழு ஆகியவற்றில் இருந்து இலவச சட்ட சேவைகள் பெறுவது குறித்த விவரங்களும், இந்த நடமாடும் இ - சேவா வாகனம் மூலம் வழங்கப்படும்.
அதேபோல, வழக்கு தொடுப்பவர்கள் மெயில் மூலமாகவே வழக்கை பதிவு செய்யலாம்.. அதேபோல, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ளவும், இந்த நடமாடும் இ - சேவா மையம் உதவியாக இருக்கும்.. வழக்கறிஞர்கள் வழக்கின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் நகல்களை பெறுவதற்கும் இந்த நடமாடும் இ - சேவா மையம் உதவுகிறது.
முதல்முறை: அதுமட்டுமல்லாமல், வழக்கின் தற்போதைய நிலை, அடுத்த விசாரணைக்கான தேதி, வழக்கு தொடர்பான மனுக்களில் இ - கையொப்பங்களை இணைத்தல், பதிவேற்றம் செய்தல், தாக்கல் எண் வழங்குதல் போன்றவைகளையும் இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியுமாம். நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நடமாடும் இ - சேவை கேந்திரா என்ற சேவை மையம், முதன்முறையாக கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications