முதல் பரிசு 12 கோடி.. கொட்டப்போகும் பணமழை! லக்கிமேன் யாரோ? கேரள விஷூ பம்பர் லாட்டரி சேல்ஸ் தொடக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில், முதல் பரிசு ரூ.10 கோடி SG 513715 என்ற லாட்டரிக்கு அடித்தது. பாலக்காட்டில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்தது. தமிழகத்தின் எல்லை மாவட்டம் என்பதால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு பரிசு அடித்தது போல சம்மர் பம்பரிலும் தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் அடித்து இருக்க கூடுமோ என்று லாட்டரி பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் பரிசு எவ்வளவு
அதேவேளையில், இதுவரை முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவில்லை. கேரளாவிற்கு பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களில் யாருக்கேனும் பரிசுத்தொகை அடித்து இருக்குமோ என்று கூட கேரள சேட்டன்கள் டீக்கடைகளில் அமர்ந்து கொண்டு பேசுவதை பார்க்க முடிகிறது. இதுவரை பரிசு விழுந்த அதிஷ்டசாலி தெரியாததால், கேரளா லாட்டரி பிரியர்கள் பலரும் தங்களிடம் உள்ள டிக்கெட்டை ஒருமுறைக்கு இருமுறை எடுத்து தங்கள் டிக்கெட் எண்ணை செக் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சம்மர் பம்பர் குலுக்கல் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது விஷு பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லாட்டரி டிக்கெடிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு 6 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். மூன்றாவது பரிசாக ரூ.10 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 5 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும்.
பாலக்காடு முதலிடம்
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.300 வரை சிறிய பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் மே 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. விஷு பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்க தொடங்கியுள்ளனர். கேரள லாட்டரி டிக்கெட் விற்பனையில் பாலக்காடுதான் அதிக விற்பனையுடன் முதலிடத்தில் உள்ளது.
எனவே, விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டும் பாலக்காட்டில் சூடுபிடிக்கும் எனத்தெரிகிறது. தலைநகர் திருவனந்தபுரத்திலும் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. கேரளாவில் ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் தினசரி ரூ.40 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பம்பர் டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும். ரூ.40 விலை கொண்ட லாட்டரிகளுக்கு ரூ.70 லட்சம் முதல் 80 லட்சம் வரை பரிசாக அளிக்கப்படுகிறது.
சட்டவிரோதம்
அதிகபட்சமாக புதன்கிழமை குலுக்கல் நடைபெறும் ஃபிப்டி ஃபிப்டி லாட்டரியில் முதல் பரிசு ரூ.1 கோடி கிடைக்கும். இந்த டிக்கெட்டின் விலை மட்டும் ரூ.50 ஆகும். கேரளவிற்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் ஒரு சிலர் கூட லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்குவதால், கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் ஜே ஜே என விற்பனையாகிறது.
கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வெளி மாநிலத்தவர்கள் வாங்கி பரிசு அடித்தால், அவர்கள் கேரளாவிற்கு வந்ததை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். வெளி மாநில கள்ளசந்தையில் டிக்கெட் வாங்கினால் பரிசுத்தொகை கிடைக்காது. அதுமட்டும் இன்றி தமிழ்நாடு உள்ளிட்ட லாட்டரி தடை அமலில் உள்ள பகுதிகளில் கேரள லாட்டரிகள் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.












Click it and Unblock the Notifications